செவ்வாய், 30 அக்டோபர், 2012

யாழ்.மாவட்டத்தில் ஒன்றரை இலட்சம் இராணுவத்தினர் நிலைகொண்டுள்ளன

யாழ்.மாவட்டத்தில் ஒன்றரை இலட்சம் இராணுவத்தினர் நிலைகொண்டுள்ளன
யாழ்.மாவட்டத்தில் ஒன்றரை இலட்சம் இராணுவத்தினரை குவிக்கப்பட்டுள்ளதுடன், மக்களின் ஏராளமான நிலப்பகுதியும் அபகரிக்கப்பட்டுள்ளது.
புத்த விகாரைகளும், யுத்த வெற்றிக்கான இராணுவ நினைவு தூபிகளும் கட்டப்பட்டு வருகின்றது. இந்த நிலையில் தமிழ் மற்றும் சிங்கள மக்கள் சக வாழ்வு வாழ்கின்றனர் என்று பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ தெரிவித்திருப்பது அவருடைய சிந்தனையில் ஏற்பட்டுக்ள குழறுபடியே என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும், யாழ்.மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினருமான சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் இன நெருக்கடி இல்லை என்று பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ ஊடகங்களுக்கு தெரிவித்தது தொடர்பாக அவர் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாற தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,கோத்தபாய ராஜபக்ஷ ஒரு இராணுவ அதிகாரியாக இருந்து தன்னுடைய பணிகளை விட்டுவிட்டு அமெரிக்காவிற்குச் சென்று குடியமர்ந்தவர். அவர் இராணுவ அதிகாரியாக இருந்த காலத்திலேயே நாட்டில் யுத்தம் நடைபெற்றுக் கொண்டிருந்ததும் அந்த யுத்தம் எதற்காக நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது என்பதும் அவருக்கு நன்கு தெரிந்த விடயம். ஆனால் அந்த யுத்தம் முடிவதற்கு முன்பாகவே அவர் அமெரிக்கா சென்றுவிட்டார்.
இலங்கை சுதந்திரம் அடைந்த காலத்தில் இருந்து தமிழ் மக்களுக்கு எதிரான பல்வேறு பட்ட விடயங்கள் நடைபெற தொடங்கி விட்டது.
முதலாவதாக மலையகப் பகுதி மக்களுடைய 10 ஆயிரம் வாக்குரிமை பறிக்கப்பட்டது. இதன் பின்னர் சிங்களம் மட்டும் அரச கரும மொழியாக்கப்பட்டது. சிங்களம் படித்தால் தான் வேலை வாய்ப்பு, பதவி உயர்வு என்ற நிலை வந்துவிட்டது. பல்கலைக்கழகத்திற்கு செல்வதற்க தமிழ் மாணவர்கள் தரப்படுத்தலின் படி கூடுதலான புள்ளிகள் பேற வேண்டிய நிலை ஏற்பட்டது.
இக்கால கட்டத்திற்கு பின்னர் தமிழ் மக்கள் பெரும்பான்மையாக வாழ்ந்த பகுதிகள் அனைத்தும் சிங்கள மக்கள் குடியேற்றப்ட்டு அப் பகுதிகளிலும் தமிழ் மக்கள் சிறுபாண்மையாக்கப்பட்டனர். இவ்வாறு பல விதமாக தமிழ் மக்கள் பாரிய நெருக்கடிக்குள் தள்ளப்பட்டனர்.தமிழ் மக்களுக்கு தீர்க்கப்படாத பாரிய பிரச்சினை இருக்கின்றது என்பது அனைத்துத் தரப்பினர்களாலும், ஆரம்ப காலத்தில் இருந்த ஜனாதிபதி மற்றும் பிரதம மந்திரிகளாலும் ஏற்றுக் கொள்ளப்பட்ட விடயம்.
இவர்கள் எல்லோரும் தமிழ் மக்களுக்கு பிரச்சினைகள் இருக்கின்றது, அவர்களுக்கு உரிய உரிமைகள் கொடுக்கப்படவேண்டும், அவர்களுடன் அரசியல் அதிகாரங்களைப் பகிர்ந்து கொள்ள வேண்டும், தமிழ் மக்கள் என்பது ஒரு தேசிய இனம், அவர்கள் வடக்கு, கிழக்கில் பெரும்பாண்மையாக வாழ்கின்றார்கள் என்ற ரீதியிலேயே தந்தை செல்வா காலத்தில் இருந்த இந்த பிரச்சினை கையாளப்பட்டது.இன்று யுத்தம் முடிவுற்ற நிலையில் குறிப்பாக வடக்கு மாகாணத்தை முழுமையாக இராணுவ மயமாக்கிக் கொண்டு இராணுவத்திற்குப் பொறுப்பான ஒரு செயலாளராக இருக்கக் கூடிய கோத்தபாயா தமிழ் மக்களுக்கு எந்த பிரச்சினையும் இல்லை, அவர்கள் சம உரிமை பெற்றுள்ளார்கள் என்பது இந்த நாட்டில் என்ன நடைபெறுகின்றது என்பது தொரியாதது போன்ற ஒரு நாடகத்தினை நடத்துகின்றார்.

இந்த நாட்டில் இனங்களுக்கு இடையில் ஒற்றுமை ஒருபோதும் இருக்க முடியாது. ஒன்றரைஇலட்சம் இராணுவத்தினை யாழ்.மாவட்டத்தில் நிலைகொண்டுள்ளார்கள்.
அவ்வாற நிலை கொண்டுள்ளவர்கள் தமிழ் மக்களுடைய நிலங்களை அபகரித்து வைத்துள்ளார்கள். தமிழ் மக்கள் மீள்குடியேற விடாமல் அவர்களுடைய நிலங்களிலும், சொத்துக்களிலும் தாம் இருந்து கொண்டு, நிலத்துக்கு சொந்தமான மக்களை காடுகளில் கொண்டு சென்று விட்டு விட்டு அப்பகுதிகளிலும் புத்த கோவில்களைக் கட்டிவிட்டு, இராணுவத்திற்கு வெற்றிவிழாக் கொண்டாடும் முகமாக இராணுவ நினைவுத் தூபிகளை நிர்மானித்துக் கொண்டு தமிழ் மக்களுக்கும் சிங்கள மக்களுக்கும் இடையில் புரிந்துணர்வு வரும் என்பது எந்த வகையில் சரியான ஒரு கருத்தாக இருக்க முடியும்.

குறிப்பிட்டு சொல்ல வேண்டும் என்றால், கோத்தபாயவின் நடவடிக்கைகள் தமிழ் மக்களையும் சிங்கள மக்களையும் மேலும் மேலும் எதிரிகளாக்கும் விடயமாகவே இருக்கின்றது.
தமிழ் மக்களும் சிங்கள மக்களும் ஒன்றாக வாழ முடியாத சூழலைத்தான் அவர் உருவாக்கிக் கொண்டிருக்கின்றார். கோத்தபாய ராஜபக்ஷ முதலில் தான் என்ன விடயத்தை செய்கின்றார் என்பதை ஜோசிக்க வேண்டும். அவருடைய நடவடிக்கை முழுவதும் தமிழ் மக்களை முழுமையாக அழித்தொழிக்கும் நடவடிக்கையே.
இவ்வாறான நடவடிக்கைகளை மேற்கொள்ளும் அவர் தமிழ் சிங்கள மக்கள் மத்தியில் சமத்துவம், ஒற்றுமை உள்ளது என்பது அவருடைய சிந்தனையில் ஏற்பட்டுள்ள குழறுபடியா அல்லது அவர் ஒன்றும் தெரியாத பாவியாக இருக்கின்றாரா என்பது தெரியவில்லை.ஆகவே அவர் சொல்கின்ற விடயம் எல்லாம் எந்தவிதத்திலும் உப்புச்சப்பில்லாத விடயம். இவ்வாறு சொல்லிக் கொண்டு இருப்பதால் எந்தப் பிரச்சினையும் தீரப்போவதில்லை என்பதை அவர் நன்கு புரிந்து கொள்ள வேண்டும்.
தமிழ் மக்களின் உன்மையான நிலமையினை உணர்ந்து, அவர்களுடன் அதிகாரங்களைப் பகிர்ந்து கொண்டு அதன் மூலமாக இந்த நாட்டில் தமிழ் மக்களும் சிங்கள மக்களும் ஒற்றுமையாக வாழ்வதற்கு ஏற்பாடுகளைச் செய்ய வேண்டுமே தவிர வட,கிழக்கில் செய்கின்ற அடாவடித்தனத்தின் ஊடாக, புத்த கோவில்களின் ஊடாக அல்லது நிலப்பறிப்பு ஊடாக அவர் எதனையும் சாதிக்கப் போவதில்லை என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக