2013ஆம் ஆண்டு மார்ச் மாதம் ஜெனிவாவில் அரசுக்கு மிகப்பெரும் அதிர்ச்சிப்பொறி காத்திருக்கிறது காலத்துக்குக் காலம் எமது தாயகத்தில் எத்தனையோ துயரமான நிகழ்வுகளை எமது இனம் சந்தித்தபோதிலும் 2004ஆம் ஆண்டு ஏற்பட்ட சுனாமி அழிவையும் 2009 ஆம் ஆண்டு சிங்களப் பேரினவாதம் புரிந்த முள்ளிவாய்க்கால் பேரவலத்தையும் எமது இனம் மறக்கத் தயாரில்லை. இவ்வாறான இடர்களிலிருந்து மீண்டெழும் வல்லமை படைத்த இனமே தமிழினம் என தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் வவுனியா நகரசபையின் பதில்தலைவர் எம்.எம். ரதன் தெரிவித்துள்ளார்.
கடற்கோள் அனர்த்தம் காரணமாக உயிர்நீர்த்த மக்களின் 8ஆம் ஆண்டு நிகழ்வு பூந்தோட்டம் சுனாமி நினைவுத் தூபியில் நகரசபையின் ஏற்பாட்டில் நேற்று நடைபெற்றது. இதில் தலைமை உரை ஆற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். உயிர் நீர்த்த மக்களுக்காக விளக்கேற்றி மலர்மாலை அணிவித்து அகவணக்கம் செலுத்தப்பட்டது.
2004 இல் ஏற்பட்ட கடல் கோள் பாதிப்பின் பின்னர் வெளிநாடுகள் இலங்கைக்கு பெரியளவில் நிதி உதவிகள், பொருளுதவிகள் புரிந்தன. ஆயினும் அந்த உதவிகள் அங்கு ஆட்சியில் இருந்த அரசினால் தமிழர்களின் தாயகப் பிரதேசத்தை சென்றடையாமல் தடுக்கப்பட்டன.
2009ஆம் ஆண்டுக்குப் பின்னர் எமது தாயகத்தில் நடப்பவையெல்லாம் அதர்ம வழி சார்ந்த விடயங்கள். திட்டமிட்ட காணி அபகரிப்புக்கள், புத்தார் சிலை நிறுவுதல், இறந்து போனவர்களுக்கு அஞ்சலி செலுத்த முடியாத நிலை, கைது செய்தல் எனப் பல அக்கிரமங்கள் தொடர்கின்றன.
2013ஆம் ஆண்டு மார்ச் மாதம் ஜெனிவாவில் அரசுக்கு மிகப்பெரும் அதிர்ச்சிப்பொறி காத்திருக்கிறது. எமது மக்களின் துயரமான வாழ்வுக்கும் துன்பகரமான சூழல்களும் இல்லாமல் போக விடுதலை நோக்கிய பயணங்கள் சிறந்து விளங்கும் என நம்புகின்றோம்.
இயற்கை அனர்த்தம் என்ற அடிப்படையில் 2004 ஆம் ஆண்டு சுனாமி அனர்த்தமும் செயற்கை பேரவலம் என்ற அடிப்படையில் 2009 ஆம் ஆணடு முள்ளிவாய்க்கால் அவலமும் என்றும் தமிழர்களின் மனங்களில் மறக்க முடியாத சம்பவங்களே ஆகும். எனவே இவ்வாறான இடர்களிலிருந்து எம்மை நாமே ஆறுதல் படுத்தி புதிய பாதையில் புதிய சிந்தனையுடன் பயணிப்போம் என ரதன் தெரிவித்துள்ளார்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக