செவ்வாய், 7 மே, 2013

தமிழர்களுக்கு கடந்தகால கசப்பான சம்பவங்களை இந்த யுத்த வெற்றி விழா மீண்டும் மீண்டும் ஞாபகப்படுத்தும்

News Serviceசிங்கள மக்களை மடையர்களாக்கி குடும்ப ஆட்சியைத் தொடர்ந்தும் தக்கவைத்துக்கொள்வதற்காகவே ராஜபக்‌ஷ அரசு யுத்த வெற்றி விழாவை பெருமெடுப்புடன் கொண்டாடுகின்றது எனக் குற்றம்சாட்டும் ஜக்கிய சோஷலிஸக் கட்சி, யுத்தம் முடிவடைந்தாலும் தமிழர்களின் பிரச்சினை இன்னும் தீரவில்லை என்று சுட்டிக்காட்டியுள்ளது. அதேவேளை, ராஜபக்‌ஷ அரசின் இந்தக் கபடதனத்தை அறிந்துகொண்டு குடும்ப ஆட்சிக்கு எதிராக தெற்கு மக்கள் வீதியில் இறங்கிப்போராடும் நாள் வெகுதொலைவில் இல்லை என்றும் அந்தக் கட்சி சுட்டிக்காட்டியுள்ளது. யுத்தம் முடிவடைந்து எதிர் வரும் 19ம் திகதியுடன் நான்கு வருடங்களாகின்றபோதிலும், நாட்டில் யுத்தம் ஏற்படுவதற்குக் காரணமாகவிருந்த பிரச்சினைக்குத் தீர்வு காணாது, அரசு மேலும் மேலும் இனவாதத்தைத் தூண்டிக்கொண்டிருக்கின்றது என்று ஜக்கிய சோஷலிஸக் கட்சியின் பொதுச்செயலாளர் சிறிதுங்க ஜயசூரிய தெரிவித்தார்.
யுத்தவெற்றிவிழாவை இம்முறையும் கொண்டாடுவதற்கு அரசு முன்னெடுத்துவரும் நடவடிக்கைகள் தொடர்பாகக் கருத்து வெளியிடுகையில் மேற்கண்டவாறு தெரிவித்த சிறிதுங்க ஜயசூரிய, பிரபாகரன் இருக்கும் வரையில் பிரச்சினைக்குத் தீர்வைக் காணமுடியாது என அன்று காரணம் கூறிவந்த அரசு ,யுத்தம் முடிவடைந்து நான்கு வருடங்களாகப்போகின்ற நிலையிலும் தமிழர்களுக்குத் தீர்வை வழங்க முன்வரவில்லை. தமக்கு தமிழ், முஸ்லிம் மக்களின் ஆதரவு தேவையில்லை என்ற மமதையிலேயே ராஜபக்‌ஷ அரசு செயற்ப்படுகின்றது. குறிப்பாக,சிங்களமக்களை மடையர்களாக்கி அவர்கள் மத்தியில் யுத்த மாயையை தோற்றுவித்து குடும்ப ஆதிக்கத்தை தக்கவைத்துக் கொள்வதற்காகவே நாட்டில் வெற்றிவிழா கொண்டாடப்படுகின்றது. நல்லிணக்கத்தை நோக்கிப் பயணிக்க வேண்டிய இந்த தருணத்தில் நாட்டில் இடம்பெற்ற கொடூர யுத்தத்தை நினைவுபடுத்துவது தகுமா?

தமிழர்களுக்கு கடந்தகால கசப்பான சம்பவங்களை இந்த யுத்த வெற்றி விழா மீண்டும் மீண்டும் ஞாபகப்படுத்தும் இதனால் தமிழர்கள் விரக்தியடைவர். அதேவேளை இந்த அரசுக்கு எதிராக தெற்கு மக்களும் வீதியில் இறங்கிப் போராடும் காலம் உதயமாகும். அந்தக் காலம் தொலைவில் இல்லையென்றே நாம் கருதுகின்றோம். என்று சிறிதுங்க கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக