பிரிவினைவாத அதிகாரங்களுடன் வடக்கு மாகாண சபைத் தேர்தலை நடத்தினால், எதிர்காலத்தில் நாட்டின் ஒருமைப்பாடு இல்லாமல் போகும் நிலைமை ஏற்படும் எனவும் அவ்வாறான தவறு நாட்டின் ஒருமைப்பாட்டை உறுதிப்படுத்த தலைமை தாங்கிய ஜனாதிபதியினால் ஏற்படாது என நம்புவதாகவும் அமைச்சர் விமல் வீரவங்ச தெரிவித்துள்ளார்.தேசிய சுதந்திர முன்னணியின் தலைமையகத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அமைச்சர் இதனை கூறியுள்ளார். 13வது அரசியல் அமைப்புத் திருத்ததின் மூலம் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களை எந்த மாகாணங்களும் இதுவரை உத்தியோகபூர்வமாக செயற்படுத்தவில்லை. மாகாணங்களுக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களை எந்த மாகாணமும் இதுவரையான காலத்தில் முற்றாக பயன்படுத்தவில்லை.
பிரதான தேசிய அரசியல் கட்சிகளிடம் மாகாணங்களின் அதிகாரங்கள் இருந்ததால், அவை அந்த அதிகாரங்களை பயன்படுத்தவில்லை. காணி மற்றும் காவற்துறை அதிகாரங்களை பயன்படுத்திய மாகாணங்களை நாம் காணவில்லை. 13வது அரசியல் அமைப்புத் திருத்தச் சட்டத்திற்கு அமைய எதிர்வரும் செப்டம்பர் மாதம் வடக்கு மாகாண சபைத் தேர்தலை நடத்தினால், 13வது அரசியல் அமைப்புத் திருத்தத்தின் உண்மையான தோற்றத்தை மக்கள் அறிந்து கொள்ள முடியும். அந்த மாகாணம் பிரிவினைவாத சக்திகளின் கைகளுக்குள் சென்றால், எவ்வளவு அதிகாரங்களை கொண்ட நிறுவனம் என்பதை அறிந்து கொள்ளமுடியும். எனினும் அது மிகவும் துரதிஷ்டவசமான நிலைமையாகும்.
வட மாகாண சபைத் தேர்தல் நடத்தப்பட்டால், புலிகளின் அரசியல் பொம்மையாக செயற்பட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கட்டியெழுப்பியுள்ள இனவாத பிரிவினைவாத நிலைப்பாடுகளின் அடிப்படையில், அவர்கள் அந்த மாகாணத்தின் ஆட்சியை கைப்பற்றுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது.அவ்வாறான சக்தி வட மாகாணத்தின் ஆட்சி பொறுப்பை ஏற்றால், மறுதினமே மாகாண காவற்துறை உருவாகும். தனியான சீருடை, மாகாணத்தின் சட்டத்திற்கு அமைவான காவற்துறை சேவை ஏற்படுத்தப்படும். 13வது அரசியல் அமைப்புத் திருத்திற்கு அமைய வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களின்படி காவற்துறை ஏற்படுத்தப்படும்.
அதுமாத்திரல்ல, 13வது அரசியல் அமைப்புத் திருத்தத்தில் வழங்கப்பட்டுள்ள காணி அதிகாரங்களை முற்றாக பயன்படுத்த ஆரம்பிப்பார்கள். அத்துடன் காணி அதிகாரங்களை பயன்படுத்தி படிப்படியாக வடக்கில் இருக்கும் இராணுவ முகாம்களை இல்லாமல் செய்யும் மாகாண சபை உருவாகும். அதேபோல் காணி மற்றும் காவற்துறை அதிகாரங்களை பயன்படுத்தி, தற்போது வடக்கில் சிறுபான்மையினராக உள்ள சிங்கள, முஸ்லிம் மக்களை விரட்டியடிக்கும் வேலைத்திட்டமும் ஆரம்பமாகும். இந்த மாகாணத்தின் ஆட்சி, இனவாத, பிரிவினைவாத, புலிகளின் பொம்மைகளின் கைகளுக்குள் செல்லும் என்பதால், இப்படியானவையே நடக்கும். புலிகள் பலத்துடன் இருந்த போது, தமிழ் தேசியக் கூட்டமைப்பு, புலிகளின் பொறுப்பாளர்களாகவே நாடாளுமன்றத்தில் பேசினர். இவர்கள் தான் தற்போதைய நிலைமையில், வடக்கில் ஆட்சியை பிடிப்பார்கள்.
தற்போது வடக்கில் 80 ஆம் ஆண்டுகளில் இருந்த சனத் தொகை இல்லை. சிங்கள, முஸ்லிம் மக்கள் அன்றிருந்தது போல் அங்கு தற்போதில்லை. உண்மையில் அதற்கு முன்னர் இருந்தே பல விதமான முறையில், சிங்கள மற்றும் முஸ்லிம் மக்கள் வடக்கில் இருந்து விரடப்பட்டுள்ளனர். இதன் பின்னர் தற்போது, சிறுபான்மையாக உள்ள சிங்கள, முஸ்லிம் மக்கள், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆட்சியின் கீழ் விரட்டியடிக்கப்படுதே நடக்க போகிறது. அது மாத்திரமல்ல வடக்கு மாகாணத்துடன் கிழக்கு மாகாணத்தை இணைக்கும் நடவடிக்கையும் ஆரம்பிக்கப்படும்.
தமிழ் மக்களும், முஸ்லிம் மக்களும் இணைந்து செயற்பட வேண்டிய காலம் ஏற்பட்டுள்ளதாக தமிழ் இனவாத கூட்டமைப்பின் தலைவர் ஒருவர் கூறியுள்ளார். எதற்காக அவர் இவ்வாறு கூறியுள்ளார். வட மாகாணத்தை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கைப்பற்றிய பின்னர், கிழக்கு மாகாணத்தை இணைத்து கொள்ள வேண்டும் என்பதற்காகவே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். முஸ்லிம் காங்கிரஸூன் இணைந்தே அதனை செய்ய வேண்டும். முஸ்லிம் காங்கிரஸ் அந்த தீர்மானத்தை ஆதரிக்குமா என்பது எனக்கு தெரியவில்லை. எனினும் தமிழ் இனவாத கூட்டமைப்புக்கு, முஸ்லிம் காங்கிரஸூன் இணைந்து கிழக்கு மாகாணத்தின் ஆட்சியமைக்கும் தேவை இருக்கின்றனது. இதனால், தமிழ் இனவாத கூட்டமைப்பு முஸ்லிம் மக்கள் குறித்து மிகவும் அனுதாபமாக பேசி வருகிறது.
கிழக்கு மாகாண முஸ்லிம் மக்கள் இந்த பொறியில் சிக்க விரும்பவில்லை என்பதால், முஸ்லிம் மக்களை பலவந்தமாக அதில் தள்ளி விடுவதற்காக நோர்வே உதவி வழங்கி, சிங்கள மற்றும் முஸ்லிம் மக்கள் இடையில் மோதல்களை ஏற்படுத்தும் அமைப்பும் உருவாக்கப்பட்டுள்ளது. சிங்கள முஸ்லிம் மக்கள் மத்தியில் மோதல்களை ஏற்படுத்தினால், கிழக்கு மாகாண முஸ்லிம் மக்கள், எமக்கு எவருமில்லை. தமிழ் சக்திகளுடன்தான் இணைய வேண்டும் என சிந்திப்பார்கள். முஸ்லிம் மக்களை அந்த நிலைமைக்கு தள்ளும் வகையிலேயே நோர்வேயின் பணத்தில் அந்த அமைப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டது.
அவர்களின் அடுத்த திட்டம் கிழக்கு மாகாணத்தில் அதிகாரத்தை கைப்பற்றுவது என்பது தெளிவாகியுள்ளது. இது அத்துடன் முடிந்து விடப் போவதில்லை. இரண்டு மாகாண சபைகளும் தனித்தனியான தீர்மானங்களை கொண்டு வந்து அதனை நிறைவேற்றி, ஒன்றாக இணைக்கப்படும். அதன் பின்னர், வடக்கு, கிழக்கில் காணி அதிகாரங்களை முன்றாக அனுபவிக்க ஆரம்பிப்பார்கள். அதன் பின்னர் இன சுத்திகரிப்பு வேறு விதமான முறையில் கிழக்கு மாகாணத்தில் ஆரம்பிக்கப்படும். கிழக்கு மாகாண என்பது மூன்று இனங்களும் சரிசமாக உள்ள மாகாணம். வடக்கு மாகாண சபைத் தேர்தல் முழுமையான அதிகாரங்களுடன் நடத்தப்பட்டால், நாட்டில் தற்போதுள்ள பிரச்சினைகளை விட அதிகளவான பிரச்சினைகளுக்குள் நாடு தள்ளப்படும்.
இந்த இரண்டு மாகாணங்களும் இணைக்கப்பட்;டு, நிர்வகிக்கப்பட்டால், தனியான நிர்வாகம் செய்யப்பட்டால், அந்த மாகாணங்கள் குறிப்பாக வடக்கு மாகாணம் தற்போது தமிழகதத்தில் ஏற்பட்டுள்ள இலங்கைக்கு எதிரான அமைப்புகளுடன் கைகோர்க்கும் இடமாக மாறிவிடும். அதுமாத்திரமல்லாது, மேற்குலக ஏகாதிபத்திய சக்திகள் மற்றும் இந்திய பரவல்வாத சக்திகளின் இருப்பிடமாக மாறும் என்பது நிச்சயம் எனவும் அமைச்சர் வீரவங்ச மேலும் தெரிவித்துள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக