இலங்கையர்கள் என நம்பப்படும் சுமார் 200 புகலிடக் கோரிக்கையாளர்களை அவுஸ்திரேலியாவுக்கு ஏற்றிச் சென்ற படகு கிறிஸ்மஸ் தீவு பகுதியில் விபத்துக்குள்ளானதில் 75 பேர் உயிரிழந்திருப்பதாக அவுஸ்திரேலிய பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர். 200 பேரை ஏற்றிவந்த படகே கவிழ்ந்து விபத்துக்குள்ளானதென கிழக்கு அவுஸ்திரேலிய பொலிஸ் கமிஸ்னர் கார்ல் ஓ´கல்லஹான் (Karl O’Callaghan) தெரிவித்துள்ளார்.இதுவரை 40 பேர் காப்பாற்றப்பட்டிருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதிக நபர்களை ஏற்றிவந்ததால் படகு கவிழ்ந்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
முன்னர் வெளியாகிய செய்தி
இலங்கையர்கள் என நம்பப்படும் சுமார் 200 புகலிடக் கோரிக்கையாளர்களை அவுஸ்திரேலியாவுக்கு ஏற்றிச் சென்ற படகு கிறிஸ்மஸ் தீவு பகுதியில் விபத்துக்குள்ளாகியுள்ளதென ஏஎப்பி செய்தி வெளியிட்டுள்ளது.
அவுஸ்திரேலியா பிரதான தீவில் இருந்து சுமார் 1600 மைல் தூரத்தில் இவ்விபத்து ஏற்பட்டுள்ளதாக அவுஸ்திரேலிய கடற்பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
படகு விபத்தில் பாதிக்கப்பட்டவர்களை காப்பாற்றும் முயற்சித்து இந்தோனேசிய கடற்பாதுகாப்பு அதிகாரிகளின் ஒத்துழைப்பு பெறப்பட்டுள்ளதாக அவுஸ்திரேலிய அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.
பலரை காப்பாற்றியுள்ளதாகவும் ஆனால் எண்ணிக்கையை கூற முடியாது எனவும் அவுஸ்திரேலிய அதிகாரிகள் கூறியுள்ளனர்.
இந்து சமுத்திரத்தில் படகு விபத்துக்குள்ளானதால் இலங்கை, ஆப்கானிஸ்தான் அல்லது ஈரான் நாட்டின் புகலிடக் கோரிக்கையாளர்கள் அப்படகில் இருந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக