அடிக்கு அடி ராணுவ பிரசன்னம் இருக்கும் யாழ்குடா நாட்டில் வீடுகள் தாக்கப்படுவதும், கழிவு எண்ணெய் வீசி எச்சரிக்கப்படுவதும், எவரால் நடத்தப்படுகின்றன என்பதை ஊகிப்பது கஷ்டமானது அல்ல. இந்த பின்னணியில், கழிவு எண்ணெய் ஊற்றி, தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் நாளைய போராட்டத்தை அரசு இன்றே ஆரம்பித்து வைத்துவிட்டது.தமிழ் மக்கள் இன்று எதிர்நோக்கும் இரண்டு பிரதான பிரச்சினைகளை உலகின் கவனத்திற்கு கொண்டு செல்லும் இந்த ஜனநாயக போராட்டம், உலகை தட்டி எழுப்ப வேண்டும். மக்களுடன் இணைந்து தமிழ் மற்றும் முற்போக்கு கட்சிகள் இந்த போராட்டத்தில் அணிதிரண்டு கலந்துகொள்ள வேண்டும்.
தமிழ் தேசிய மக்கள் முன்னணி நாளை நெல்லியடியில் ஏற்பாடு செய்துள்ள இந்த ஜனநாயக போராட்டத்தில் எமது கட்சி கலந்துகொள்ளும் என ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் மனோ கணேசன் மேலும் கூறியதாவது, தமிழ் மக்கள் இன்று எதிர்நோக்கும் பிரச்சினைகளின் பட்டியல் நீண்டது. இந்த பட்டியலில் இரண்டு பிரதான பிரச்சினைகள் உள்ளன. ஒன்று, அரசியல் கைதிகளின் பிரச்சினை ஆகும். இந்த பிரச்சினை இன்று நிமலரூபனின் படுகொலையுடன் அம்பலத்துக்கு வந்து விட்டது. அடுத்த பிரதான பிரச்சினை, தமிழ் மக்களின் பாரம்பரிய நிலம் அபகரிக்கப்படுவதாகும்.
மண் அபகரிப்புக்கு எதிரான தமிழ் மக்களின் மன உணர்வுகளை உலகின் கவனத்திற்கு அழுத்தமாக கொண்டு செல்லும் பணியினை தமிழ் தேசிய மக்கள் முன்னணி, யாழ்ப்பாணத்தில் ஆரம்பித்து வைத்திருந்தது. இந்த போராட்டம் இன்று வளர்ச்சி பெற்று வருகின்றது. இந்நிலையில் தற்போது, மண் அபகரிப்பு பிரச்சினையுடன் இணைந்து, அரசியல் கைதிகள் பிரச்சினையையும் முன்னெடுக்கும் முகமாக இந்த ஜனநாயக போராட்டம் முன்னெடுக்கப்படுகிறது. இந்த போராட்டத்தில் ஜனநாயக மக்கள் முன்னணி கலந்துகொண்டு உறுதியான பங்களிப்பை வழங்கும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக