ஞாயிறு, 2 செப்டம்பர், 2012

மன்மோகன் சிங், பான் கீ மூன் சந்திப்புகள் கைகூடவில்லை! ஏமாற்றத்துடன் நாடு திரும்பிய மகிந்த


அணிசேரா நாடுகளின் தலைவர்களின் இரண்டு நாள் உச்சி மாநாட்டில் பங்கேற்கச் சென்ற ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச, அங்கு இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்கை தனிப்படச் சந்தித்துப் பேச முடியாத நிலையில் நாடு திரும்பியுள்ளார்.

இரண்டு நாள் உச்சி மாநாட்டுக்காக ஈரான் சென்றிருந்த மகிந்த ராஜபக்ச தனது பயணத்தை முடித்துக் கொண்டு இன்று அதிகாலை கொழும்பு திரும்பினார்.
ஈரானில் தங்கியிருந்த போது, அவர் பாகிஸ்தான் அதிபர் ஆசிவ் அலி சர்தாரி, பங்களாதேஸ் பிரதமர் சேக் ஹசீனா, ஈரானிய அதிபர் மொகமட் அகமடிநெஜாட், லெபனானிய அதிபர் ஜெனரல் மிசெல் சுலைமான், ஈரானிய ஆன்மீகத் தலைவர் ஆயதுல்லா அலி கொமெய்னி ஆகியோரை தனிப்படச் சந்தித்துப் பேசியிருந்தார்.
இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்துப் பேசுவதற்கு அவர் விருப்பம் வெளியிட்டிருந்த போதிலும், புதுடெல்லி அதற்காக நேரத்தை ஒதுக்கிக் கொடுக்கவில்லை என்று தெரியவருகிறது.
அண்மைக்காலமாக ஐ.நா பொதுச்சபைக் கூட்டம், கொமன்வெல்த் மாநாடு, சார்க் போன்ற அனைத்துலக மாநாடுகளின் போதே இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்கை இலங்கை ஜனாதிபதி சந்தித்துப் பேசிவந்தார்.
எனினும் இவர்கள் இருவரும் அணிசேரா நாடுகளின் மாநாட்டில் ஒன்றாகப் பங்கேற்ற போதும், தனியாகச் சந்தித்துக் கொள்ளவில்லை.
அதேவேளை, அனைத்துலக மாநாடு ஒன்றில் இவர்கள் இருவரும் தனிப்படச் சந்தித்துக் கொள்ளாத முதல் சந்தர்ப்பமாக இது கருதப்படுகிறது.
அத்துடன், அணிசேரா மாநாட்டில் கலந்து கொண்ட ஐ.நா பொதுச்செயலர் பான் கி மூனை, மகிந்த ராஜபக்ச சந்திக்கவுள்ளதாக சில ஊடகங்களில் செய்திகள் வெளியாகியிருந்த போதிலும், பான் கீ மூனையும் மகிந்த ராஜபக்ச சந்திக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக