13ஆவது, 19ஆவது, 20ஆவது, 21 ஆவது, 22ஆவது எனிப் போகும் இலக்கங்களில் எமக்கு அக்கறையில்லை. ஆனால் 13க்கு கீழே போக முடியாது என ஜனநாயக மக்கள் முன்னணித் தலைவர் மனோ கணேசன் தெரிவித்தார். 13ஆம் திருத்தத்திற்கு மேலே போகிறோம் என்பது கற்றுக்கொண்ட ஆணைக்குழு என்ற அறிக்கையை சமர்ப்பித்து இந்த அரசாங்கம் ஐ.நா.சபைக்கு செய்து கொடுத்த சத்தியமாகும் என மனோ கணேசன் மேலும் தெரிவித்தார். அதிகாரப் பகிர்வு, நல்லிணக்க போராட்ட இயக்கம் நேற்று கொழும்பில் நடத்திய வாராந்த ஊடகவியலாளர் மாநாட்டில் உரையாற்றிய மனோ கணேசன் மேலும் கூறியதாவது, பகவத்கீதை, பைபிள், திருக்குரான், தம்மபதம் ஆகிய புனித நூல்களைப்போன்று இன்று அரசாங்கம் அரசியல் ரீதியாக கற்றுக் கொண்ட ஆணைக்குழு அறிக்கையைதான் பயன்படுத்துகிறது. இந்த அறிக்கையில் இன்று இருக்கும் அதிகாரப் பகிர்வு அமைப்பை அடிப்படையாகக் கொண்டு மேலே செல்ல வேண்டும் என்றும் அதை அபிவிருத்தி செய்யவேண்டும் என்றும் சிபார்சு செய்யப்பட்டுள்ளது. இதை எடுத்துச் சென்றுதான் மகிந்த சமரசிங்க, ஜீ.எல்.பீரிஸ் ஆகியோர் ஐ.நா. மனிதவுரிமை ஆணைக்குழுவில் சத்தியம் செய்து வந்தார்கள். இதில் உள்ள சிபார்சுகளை அமுல்படுத்துவதாக சொல்லி வந்தார்கள். ஆகவே 13ஆம் திருத்தத்திற்கு மேலே போக முடியுமே தவிர கீழே போகமுடியாது. விமல் வீரவன்ச, சம்பிக்க ரணவக்க என்ற அமைச்சர்கள், குணதாஸ அமரசேகர என்ற பல்வைத்தியர் சொல்வதைப் போல் நாட்டைக் கொண்டு நடத்த முடியாது. அதிகாரத்தை பகிர்வதன் மூலம் நாட்டுப் பிரிவினையை தவிர்ப்போம். சிங்கள, தமிழ், முஸ்லிம், பெளத்த, இந்து, இஸ்லாம், கிறிஸ்தவ, மக்களை ஒற்றுமைப்படுத்துவோம் என நாம் கூறுகிறோம். ஆனால் இனவாதிகள் இந்த ஒற்றுமைக்கு எதிராக கூக்குரல் இடுகிறார்கள். அதிகாரத்தை பிரித்து நாட்டுப்பிரிவினையை தவிர்ப்பதை எதிர்க்கிறார்கள். ஆகவே இவர்கள்தான் பிரிவினைவாதிகள். ஐக்கியத்தை ஏற்படுத்த குரல் கொடுக்கும் நாம் இந்த நாட்டின் இன ஒற்றுமையை பாதுகாக்கும் தேசியவாதிகள் எனவும் மனோ கணேசன் தெரிவித்தார்.மேலும் அவர் வெலிக்கடை சிறைச்சாலை கலவரம் பற்றியும் உரையாற்றினார். வெளிக்கடைச் சிறைச்சாலைக்கு உள்ளே போதைப் பொருட்கள், ஆயுதங்கள் இருக்கின்றன என இராணுவத்தையும் பொலிஸையும் அனுப்பி தேடினார்கள். அதனால் கலவரம் மூண்டு இன்று 27 பேர் கொல்லப்பட்டும் 50ற்கும் மேற்பட்டோர் காயப்பட்டும் உள்ளார்கள். இது அதிகாரப்பூர்வ தகவல். ஆனால் அதிகாரபூர்வ மற்ற முறையில் 150ற்கும் மேற்பட்டோர் காயப்பட்டோ, கொல்லப்பட்டோ உள்ளார்கள் என செய்திகள் வெளியாகியுள்ளது. இந்தப் பொருட்கள் எப்படி உள்ளே போயின? ஒருகாலத்தில் யாழ்ப்பாணத்தில் இந்திய விமானங்கள் பருப்புக் கொண்டுவந்து போட்டது போல் இங்கே எவராவது விமானத்தில் போதைப் பொருட்களையும் ஆயுதங்களையும் கொண்டு சென்று போட்டார்களா? இந்த பொருட்கள் வாயில் கதவுகள் வழியாகத்தான் போயுள்ளன. சிறைக்காவலர்கள் இந்தப் பொருட்களை உள்ளே கொண்டு செல்ல இடமளித்துள்ளார்கள். எனவே இந்த வழிமுறையை நீங்கள் மாற்றியமைக்க வேண்டும். இந்த விடயத்தில் முதல் குற்றவாளிகள் இவர்கள்தான். மனிதவுரிமை ஆணையாளர் ஆனந்தராஜா லண்டன் பி.பி.சியில் என்ன சொன்னார்? கடந்த மாதங்களில் இந்தச் சிறைச்சாலைக்குச் சென்றுவந்து ஆய்வறிக்கை தயாரித்து பல சிபார்சுகளை சிறைச்சாலை திணைக்களத்திடம் தாம் வழங்கியதாக சொல்கிறார். இலங்கை மனிதவுரிமை ஆணைக்குழுவின் இந்த சிபார்சுகள் அமுல் செய்யப்படவில்லை. அதனால்தான் கலவரம் ஏற்பட்டு இந்தளவுக்கு உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது.
மகிந்த சமரசிங்க கடந்தவாரம் ஐ.நா. சென்று என்ன சொன்னார்? இந் நாட்டில் மனிதவுரிமை ஆணைக்குழு இருக்கிறது. அது சுதந்திரமாக செயல்படுகிறது. அதன் யோசனைகளை தமது அரசு கவனத்தில் எடுப்பதாக சொன்னார். இங்கே என்ன நடந்துள்ளது? வடக்குக் கிழக்குப் பிரச்சினைகளை தேசிய இனப்பிரச்சினைகளை கற்றுக் கொண்ட பாடங்கள் ஆணைக்குழுவின் சிபார்சுகளை அமுல் செய்யும் பிரச்சினைகளை விட்டுவிடுங்கள். கொழும்பில் அமைந்துள்ள ஒரு சிறைச்சாலை சம்பந்தமாக மனித உரிமை ஆணைக் குழு தருகின்ற சிபார்சுகளைக் கூட உங்களால் அமுல் செய்ய முடியவில்லை. வெட்கம் கெட்ட அரசாங்கம், வெட்கம் கெட்ட அமைச்சர்கள். கொலை செய்யப்பட்ட பாதாள கோஷ்டிகளை, போதைப்பொருள் வியாபாரிகளை ஊட்டிவளர்த்தவர்கள் யார் என்பது இந் நாட்டு மக்களுக்கு தெரியும். இன்று இவர்களை கொன்று போடுவதன் மூலம் சாட்சியங்கள் அழிக்கப்பட்டுவிட்டன. இதுதான் நடந்துள்ளது. சிறைச்சாலை சண்டை முடிந்தபின் அதிகாலையில் மீண்டும் தமது பிள்ளைகளைத் தேடி வந்து கூட்டிச் சென்று சுட்டுக்கொன்றுள்ளார்கள் என கொல்லப்பட்ட சிலரது தாய் தந்தையர்கள் சொல்கிறார்கள். இது பாரதூரமானது. இந்தக் குற்றச்சாட்டுக்கு அரசு பதில் சொல்ல வேண்டும் எனவும் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக