வியாழன், 1 நவம்பர், 2012

இலங்கை தமிழர்களை காப்பாற்றும் பணியை தொடரப் போகிறேன் - தொடரப் போகிறேன் என்கிறார் கருணாநிதி..!

News Service
இலங்கை தமிழர்களை காப்பாற்றும் பணியை தொடரப் போகிறேன் - தொடரப் போகிறேன் என்கிறார் கருணாநிதி..!
இலங்கை தமிழர்களையும் உலகத் தமிழர்களையும் காப்பாற்றும் பணியை தொடருவோம் என்று கருணாநிதி கூறியுள்ளார். திமுக தலைவர் கருணாநிதி நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலினும், நாடாளுமன்ற திமுக குழுத் தலைவர் டி.ஆர்.பாலுவும் 31ம் தேதி விடியற்காலையில் அமெரிக்காவுக்கு டெசோ இயக்கம் சார்பாக திமுக தூதுவர்களாக புறப்பட்டுச் சென்றிருக்கிறார்கள். அமெரிக்காவில் ஐ.நா. சபையில் அவர்கள் அளித்திட இருக்கிற அறிக்கை நகல்களையும், சி.டி. போன்றவற்றில் எனக்கு ஒரு பிரதியை அளித்து சென்றார்கள். இரவு முழுவதும் திரும்ப திரும்ப அதைத்தான் பார்த்து கொண்டிருந்தேன். நானும், டெசோ உறுப்பினர்களும் அமர்ந்து விவாதித்து, தக்க திருத்தங்களை செய்து, மிகுந்த கவனத்தோடு தயாரிக்கப்பட்ட அறிக்கைதான் அது.
நாளெல்லாம் கழகம், கழகம் என்று பம்பரம்போல் சுற்றிச் சுழன்று பாடுபடுவதைப் பார்த்து இளம் வயதில் நாம் உழைத்ததை போலவே நம் மகனும் உற்சாகத்தோடு உழைப்பதை எண்ணி மனதிற்குள் பெரும் மகிழ்ச்சி அடையும் நான், ஈழத் தமிழர்களின் பிரச்னைகளுக்கு தீர்வு காணப்பட வேண்டும் என்பதற்காக நேற்று அமெரிக்கா பயணம் மேற்கொள்ள என்னிடம் விடை பெற்றுக் கொண்ட போது, மிசா கைதியாக ஸ்டாலின் சிறைக்குப் புறப்பட்ட நினைவும், சிறைச்சாலையிலே அடிக்கப்பட்ட கையிலே உள்ள காயத்தை மறைத்து முழுக்கை சட்டை போட்டுக் கொண்டு என்னைச் சந்தித்த அந்த நினைவும்தான் என் மனதை சூழ்ந்து கொண்டிருந்தன.

ஸ்டாலின் பிறந்த போது ஏற்பட்ட மகிழ்ச்சியை விட, மிசா கைதியாக சிறைக்குள் இருந்த போது ஏற்பட்ட மகிழ்ச்சியை விட, ஈழத் தமிழர்கள் வாழ்வில் இருள் நீங்கி ஒளி பிறந்திட வேண்டுமென்பதற்காக, அவர் பயணம் மேற்கொள்வதில் எனக்கு தனிச் சிறப்பான மகிழ்ச்சி ஏற்பட்டது.

டி.ஆர். பாலு பற்றி சொல்லித் தெரிய வேண்டியதில்லை. அவர் சென்னையில் ஸ்கூட்டரில் சுற்றிய காலத்திலிருந்து, கழகம், கழகம் என்று உழைத்ததை நான் அறிவேன். அவருடைய மாமனார் செங்குட்டுவன் சென்னை மாவட்ட திமுக செயலாளராக இருந்து பணியாற்றினார். பின்னர், ஆர்.டி.சீதாபதி மாவட்ட செயலாளராக இருந்த போது அவரிடம் துணைச் செயலாள ராக இருந்து, கட்சிப் பணிகளைக் கற்று, பின்னர் சென்னை மாவட்ட செயலாளர் ஆனவர். முரசொலி மாறனின் பேரன்பைப் பெற்றவர். அவரிடம் பாராளுமன்றப் பணிகள் பற்றி பாடம் கற்றவர்.

நாடாளுமன்ற திமுக குழுத் தலைவராக இன்று டி.ஆர்.பாலு சிறப்பாகப் பணியாற்றுகிறார் என்றால், அதெல்லாம் மாறனிடம் பெற்ற பயிற்சிதான். என்ன, கொஞ்சம் பிடிவாதக்காரர், கோபக்காரர். அதுவும் என் முன் கோபப்படுவதை போலக் காட்டிக் கொள்வார். அவரும் என்னிடம் நேற்று விடைபெற்றார். அண்ணா அறிவாலய வாசலில் சாலையில் காவலர்கள் சூழ்ந்து கொண்டு அவரை தாக்கிய காட்சியும் என்னை அதிமுக அரசு கைது செய்த போது, காவலர்களிடம் அவர் போராடி அடிகளை தாங்கிக் கொண்ட காட்சியும்தான் நேற்று எனக்குத் தெரிந்தது. அவரும் இலங்கைத் தமிழர்களின் நலன்களுக்கான என்னுடைய கோரிக்கையைத் தாங்கி ஐ.நா. மன்றத்தில் அதனை வழங்குவதற்காக புறப்பட்டுச் சென்றுள்ளார்.

அவர்களின் இந்தப் பயணம் வெற்றி பெற என்னுடைய வாழ்த்துக்களை தெரிவிக்கிறேன். என்னுடைய வாழ்த்துகள் மட்டுமல்ல, ஈழத் தமிழர்களின் நலனில் அக்கறையுள்ள அத்தனை தமிழர்களும் இந்த பயணம் வெற்றி பெறவும், ஈழத் தமிழர் வாழ்வில் விடியல் காணவும் வாழ்த்த வேண்டும்.

தமிழக அரசின் எதிர்ப்புக்கிடையில் மிகச் சிறப்பாக நடத்திய டெசோ மாநாட்டில் பல முக்கிய தீர்மானங்களை வடித்தெடுத்தோம். அந்தத் தீர்மானங்களை ஐ.நா. மன்றத்தில் இந்தியா கொண்டு செல்ல வேண்டுமென்று பிரதமருக்கு கடிதமும் நான் எழுதினேன். கடிதத்தை பிரதமரிடம் கடந்த 21-8-2012ல் திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் நேரில் கொண்டு போய் கொடுத்திருக்கிறார்கள். அதற்கு பிரதமர் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்வதாக உறுதி அளித்ததோடு, ஏற்கனவே ஐ.நா. மனித உரிமை ஆணையத்தில் இலங்கைக்கு எதிராக கொண்டு வரப்பட்ட தீர்மானத்தை இந்தியா நமது வேண்டுகோளை ஏற்று ஆதரித்தது என்பதையும் நினைவு கூர்ந்தார்.

பிரதமருக்கு எழுதிய கடிதத்தின் நகலை ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் தலைவர் சோனியா காந்திக்கும் திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் நேரில் சென்று அளித்தனர். என்னுடைய கடிதத்திற்கு பதில் எழுதிய பிரதமர் மன்மோகன் சிங், இலங்கைத் தமிழர்களின் நலனுக்கும், நல்வாழ்வுக்கும் தேவையான பணிகளில் இந்திய அரசு அக்கறை காட்டி வருகிறது என்றும், ஈழத் தமிழர்களின் மறு குடி அமர்வு மற்றும் மறுவாழ்வுக்கு இந்திய அரசு மிகுந்த முன்னுரிமை வழங்கிச் செயல்படுகிறது என்றும் தெரிவித்திருந்தார்.

மேலும், அதிகாரப் பகிர்வு குறித்து ஈழத் தமிழர்களின் அரசியல் பிரதிநிதிகளுடன் பேச்சு வார்த்தை நடத்தவேண்டியதன் அவசியத்தையும் இலங்கை அரசுக்கு தெரிவித்திருக்கிறோம் என்றும், எதிர்காலத்தில் ஈழத் தமிழர்கள் சம உரிமை, கௌரவம், சமநீதி மற்றும் சுயமரியாதையுடன் வாழக்கூடிய நிலையை உருவாக்கிட இலங்கை அரசுடன் இந்திய அரசு தொடர் முயற்சிகளை மேற்கொள்ளும் என்றும் தெரிவித்திருந்தார்.

கடந்த 3-10-2012ல் என் தலைமையில் டெசோ அமைப்பின் கலந்துரையாடல் கூட்டம் நடைபெற்றது. அதில் டெசோ மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களையும், ஈழத் தமிழர்கள் அரசியல் உரிமைகளையும், வாழ்வுரிமைகளையும் குறித்த எனது கோரிக்கை மனுக்களை நியூயார்க்கில் உள்ள ஐ.நா. பொதுச் செயலாளரிடமும் ஜெனீவாவில் உள்ள ஐ.நா. மனித உரிமை ஆணையத்திடமும் வழங்க முடிவெடுத்து இந்தக் கோரிக்கை மனுக்களை மு.க. ஸ்டாலினும், டி.ஆர்.பாலுவும் நேரில் சென்று அளிப்பார்கள் என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

அதன்படி, இந்த பயணம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இலங்கைத் தமிழர்களின் நல்வாழ்வுக்காக 1956ம் ஆண்டிலிருந்து திமுக தொடர்ச்சியாக மேற்கொண்ட எத்தனையோ முயற்சிகளில், இந்தப் பயணமும் ஒன்றாக வரலாற்று பதிவேட்டில் இடம் பெறும். இந்த பயணம், பயனுள்ள பயணமாக, வெற்றி பயணமாக அமைந்து, இலங்கைத் தமிழர் வாழ்வில் அமைதியும், அனைத்து ஜனநாயக உரிமைகளும் கிடைக்க வேண்டுமென்று உலகத் தமிழர்கள் எல்லாம் விரும்புவதைப் போலவே நாமும் பெரிதும் விரும்புகிறோம். ஆனால், நமது தமிழர்களிலேயே ஒரு சிலர் இனப் பகைவர்களை எதிர்க்கிறார்களோ இல்லையோ, நம்மை எதிர்ப்பதில்தான் இன்பம் காணுகிறார்கள்.

சிலர் என்னை தூற்றுகிறார்கள் என்பதற்காக நான் என்றைக்கும் வருத்தப்பட்டதில்லை. என்னை இப்போது தூற்றுகிறவர்கள் எல்லாம் முன்பு என்னைப் பாராட்டியவர்கள்தான். நாளை மீண்டும் என்னை பாராட்டப் போகின்றவர்கள்தான். போற்றுவார் போற்றட் டும் புழுதி வாரித் தூற்றுவார் தூற்றட்டும், என் கடன் பணி செய்துகிடப்பதே என்பதை மனதில் செதுக்கி வைத்துக்கொண்டு, சிந்தனையைச் சிதற விடாமல், நமது நல்ல பணியைத் தொடருவோம். இங்கேயுள்ள தமிழர்களை மட்டுமல்ல இலங்கைத் தமிழர்களையும், உலகத் தமிழர்களையும் உணர்வுப்பூர்வமாகக் காப்பாற்றவும், அவர்களை முன்னேற்றவும், நம்மால் முடிந்த பணிகளை முனைப்புடன் தொடருவோம், அதற்கெனவே ஐ.நா. பயணம் மேற்கொண்டுள்ள ஸ்டாலின், பாலு ஆகியோரின் முயற்சி வெற்றிபெற வாழ்த்துகளை தெரிவிக்கின்றோம். இவ்வாறு கருணாநிதி கூறியுள்ளார்


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக