திங்கள், 31 டிசம்பர், 2012

யாழில் மோதல்! தனியார் பஸ்கள் பகிஸ்கரிப்பு

busயாழ். மாவட்டத்தில் பணியில் ஈடுபடும் தனியார் பஸ்கள் இன்று தொடக்கம் காலவரையறையற்ற பணிப் புறக்கணிப்பில் ஈடுபடப் போவதாகத் தனியார் பஸ்சங்கங்கள் அறிவித்துள்ளன.“ஆயினும், இதுபற்றி எமக்கு எதுவும் அறிவிக்க வில்லை, அறிவித்திருந்தால் பேசித் தீர்த்திருக்கலாம். வருட இறுதி நாளில் மக்கள் போக்குவரத்து அதிகரித்துள்ள நிலையில், முன் அறிவிப்பு மேற்கொள்ளப்படும் இத்தகைய எதிர்ப்பு நடவடிக்கைகள் மக்களுக்கு அசௌகரியம் ஏற்படுவதாகவே கருதுகிறேன்.

இது தவறான விடயம். அவர்கள் தன்னிச்சையாக இந்த முடிவை எடுத்துள்ளனர்” என்று யாழ். மாவட்ட அரச அதிபர் சுந்தரம் அருமைநாயகம் கருத்துத்தெரிவித்துள்ளார்.
இந்தப் பணிப்புறக் கணிப்புக் குறித்து யாழ். பிராந்திய கூட்டிணைக்கப்பட்ட பஸ் கம்பனிகளின் இணையம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
யாழ்ப்பாணத்திலிருந்து பருத்தித்துறை மற்றும் அச்சுவேலிப் பகுதிகளுக்கு இணையத்தினால் நேரக்கணிப்பாளர்களை நியமித்து நேரஅட்டவணை தயாரித்துப் பணியில் ஈடுபட்டுவந்தோம்.
பின்னர் பருத்தித்துறைச் சங்கம் இணையத்திலிருந்து பிரிந்து தனியாக இயங்க ஆரம்பித்தது. அதனால் அரச அதிபரினால் தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் நேரக்கணிப்பாளர்கள் கடமையில் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர். சில மாதங்களாகப் பருத்தித்துறைச் சங்கத்துக்கும், அச்சுவேலிச் சங்கத்துக்கும் இடையே முரண்பாடுகள் ஏற்பட்டு அவை கைகலப்பு வரை சென்றன.
கடந்தவாரம் அச்சுவேலிச் சங்கத் தலைவர் கடமையில் இருந்தபோது, பருத்தித்துறைச் சங்க பஸ் சாரதி ஒருவர் அவரைத் தாக்கியுள்ளார். நேற்றைய தினமும் முரண்பட்டுபருத்தித்துறைச் சங்கப் பஸ் நடத்துநர் ஒருவர் அச்சுவேலிச் சங்கப் பஸ் நடத்துநருக்கு உடைத்த போத்தலால் வயிற்றில் குத்திக் காயம் விளைவித்துள்ளார்.
இந்த முரண்பாடு தொடர்பாக யாழ். அரச அதிபருக்கும் உரியவர்களுக்கும் முன்னரும் தெரியப்படுத்தியும் எதுவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. சங்கங்கள் ஒன்றாக இயங்குவதற்கு நடவடிக்கையும் எடுக்கவில்லை. தொடர்ந்தும் இந்தப் பிரச்சினை நீடிப்பதால் எதிர்காலத்தில் மக்களுக்குச் சிறந்த சேவையை வழங்கமுடியாத நிலை ஏற்படும்.
எனவே, இந்தப் பிரச்சினையைத் தீர்க்கும் வரை இன்று திங்கட்கிழமை தொடக்கம் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளோம்” என்றுள்ளது. “இன்று வருட இறுதிநாள் என்பதால் மக்கள் நகருக்கு வந்துசெல்வது அதிகமாக இருக்கும். தேவைகள் அதிகம் என்பதால் இன்று பணிப்புறக்கணிப்புச் செய்தால் மக்கள் பாதிக்கப்படுவார்களே?”
என்று நாம் இணையத் தலைவர் பொ.கெங்காதரனிடம் தொடர்பு கொண்டு கேட்டோம்.
அதற்குப் பதிலளித்த அவர் “மக்கள் பாதிக்கப்படுவர்கள் என்பதற்கப்பால், எமது பிரச்சினைகள் மக்களுக்குத் தெரிய வேண்டும். திட்டமிட்டபடி இன்று பணிப்புறக்கணிப்பு நடந்தே தீரும். அரச அதிபரையும் சந்திப்போம்.” என்றார்.
இதேவேளை,
பருத்தித்துறை யாழ். சேவையிலீடுபடும் தமது பஸ்கள், சாரதிகள், நடத்துநர்கள் மற்றும் பயணிகளுக்குப் பாதுகாப்பு உத்தரவாதம் வழங்கும்வரை இன்று தொடக்கம் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளதாக பருத்தித்துறை தனியார் பஸ் சங்கம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்படுவதாவது:
நேற்று ஞாயிற்றுக்கிழமை நல்லூர், சட்டநாதர் சிவன் கோயிலை அண்மித்து, எமது சங்க பஸ் ஒன்று பருத்தித்துறை நோக்கிச் சென்றுகொண்டிருந்தது. அப்போது அச்சுவேலியிலிருந்து பஸ்ஸில் வந்திறங்கிய 20 பேர் கொண்ட குழுவினர் எமது சங்க பஸ் நடத்துநரையயும், சாரதியையும் வழிமறித்துத் தாக்கினர். அவர்கள் பின்னர் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டனர்.
தொடர்ந்து பருத்தித்துறையிலிருந்து யாழ். நோக்கிச் சென்ற எமது சங்க பஸ்ஸை அச்சுவேலி, நாவற்காடுப் பகுதியில் தடைபோட்டு சிலர் தடுத்து வைத்தனர். அந்த பஸ்ஸில் இருந்த சாரதி, நடத்துநர் மீதும் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதனால் பயணிகளும் தமது பயணத்தைத் தொடர முடியாது தடுமாறினர். இதேவேளை யாழ்ப்பாணத்தில் இருந்து வல்வெட்டித்துறை ஊடாகச் சென்று கொண்டிருந்த 751 வழித்தட பஸ் வண்டியின் சாரதி நடத்துநர் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இவ்வாறான தொடர்ச்சியான தாக்குதல்கள் காரணமாக எமது சங்க பஸ்களில் பயணிக்கும் பயணிகளுக்கும், சாரதிகள், நடத்துநர்கள் என்போருக்கும் பாதுகாப்பற்ற அச்சமான சூழ்நிலை தோன்றியுள்ளது.
எனவே எமது பஸ்களினதும், பயணிகளினதும், சாரதிகள், நடத்துநர்களினதும் பாதுகாப்பு உறுதிப்படுத்தும்வரை பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளோம். என்றுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக