பிரபல ஊடகவியலாளர்கள் முன்னிலையில் சிறீதரனின் அலுவலகத்தில் இருந்து ஆணுறைகள் மீட்புயாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரனின் அலுவலகத்தில் இருந்து 4 சீ வெடிமருந்துகள், ஆபாச இறுவட்டுகள், ஆணுறைகள் மீட்கப்பட்டதாக இலங்கைப் புலனாய்வுப் பிரிவினர் ஊடகங்களுக்கு செய்திகளை வழங்கியுள்ளனர்.
இன்று சிறீதரனின் பத்திரிகை அலுவலகத்தில் தொடர்ந்து இடம்பெற்ற தேடுதலின் போது எந்த ஊடகங்களும் அனுமதிக்கப்படவில்லை. எனினும் ஆளும் கட்சிக்கு ஆதரவாக யாழ்ப்பாணத்தில் இருந்து வெளிவரும் பத்திரிகையின் கிளிநொச்சி பெண் செய்தியாளரும் முள்ளிவாய்க்காலின் பின் ஞானஸ்தானம் பெற்று ஊடகவியல் தெரிந்த ஒரே பிரபல ஊடக ஜாம்பவான் தானே என தனக்கு பட்டம் சூட்டியவருமான ஒருவருமே தேடுதலின் போது படைப் புலனாய்வாளர்களால் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். இந்த பிரபல பத்திரிகையாளர்கள் முன்னிலையிலேயே சிறீதரனின் அலுவலகத்தில் ஆணுறைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இலங்கையின் யுத்த வரலாற்றில் வடகிழக்கில் நடத்தப்பட்ட புலனாய்வாளர்களின் தேடுதலின் போது தமிழ்ப் பத்திரிகையாளர்களையும் அனுமதித்து அவர்கள் முன்னிலையில் நடத்தப்பட்ட விசேட தேடுதல் என்றால் சிறீதரனின் அலுவலகத் தேடுதலாகவே இருக்க முடியும் என கொழும்பின் ஊடகவியலாளர்கள் சிலர் கருத்து தெரிவித்தனர்.
இதே வேளை யாழ்ப்பாணத்திலேயே இருந்து தனது கடமைகளை ஆற்றும் இந்தப் பிரபல பத்திரிகையாளருக்கு இப்படி ஒரு தேடுதல் நடக்கப் போவதாக முன்னமே தகவல் தெரிந்திருக்க வேண்டும் எனக் கூறும் உள்ளகத் தகவல் ஒன்று அவர் ஏற்கனவே கிளிநொச்சிக்கு சென்று காத்திருந்ததாகவும் தெரிவிக்கிறது.
பொன்னம்பலம் லட்சுமி காந்தன் விடுதலை - வேளமாலிகிதன் கைது - கணனிகள் – ஆவணக் கோவைகள் உள்ளிட்ட முக்கிய குறிப்புகள் கொண்டு செல்லப்பட்டன:-
இன்று இடம்பெற்ற விசாரணைகளின் பின் நாடாளுமன்ற உறுப்பிர் சிறிதரனின் செயலாளர்களில் ஒருவரான பொன்னம்பலம் லட்சுமி காந்தன் விடுவிக்கப்பட்டு உள்ளார். அலுவலகப் பொறுப்பாளரான 38 வயதுதுடைய அருணாசலம் வேளமாலிகிதன் கைது செய்யப்பட்டு அழைத்துச் செல்லப்பட்டு உள்ளார். இங்கு நடத்தப்பட்ட தேடுதலில் கணனிகள் – ஆவணக் கோவைகள் உள்ளிட்ட முக்கிய குறிப்புகள் எடுத்துச் செல்லப்பட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த ஆவணங்கள் புலம்பெயர்ந்த மக்களினால் வழங்கப்பட்ட உதவித்திட்டங்களின் கணக்கு விபரங்கள் மற்றும் - விபர அறிக்கைகள் அறிக்கைகள் எனத் தெரிவிக்கும் கிளிநொச்சித் தகவல்கள் நாளைய அரச ஊடகங்களில் இவை புலிகளுக்கு வழங்கப்பட்ட உதவிகளாக காட்டப்படும் வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவித்துள்ளன.
காரணம் இன்றைய தேடுதலில் ஆணுறைகள், பெண்களின் ஆபாச காணொளிகள், மற்றும் ஆபாசா இறுவெட்டுக்கள் என்பவற்றை எடுப்பதற்கு சில நாட்களுக்கு முன்னதாகவே அரச சார்பு இணையங்கள் செய்திகளில் சிறீதரனை இலக்கு வைத்து பாலியல் துஸ்பிரயோக குற்றச் சாட்டில் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினருக்கு பிடியானை என்ற செய்தி வெளியிடப்பட்டு இருந்தது.
இத்தகைய நடவடிக்கைகளின் பின்னணியில் அரச சார்பு இணையங்கள் ஊடகங்களுடன் இணைந்தே புலனாய்வுப் பிரிவினதும் இலங்கைப் பாதுகாப்பு தரப்பினதும் திட்டமிட்ட முற்றுகைகள், அதன்பின்னான பிரச்சாரங்கள் தொடர்வதாக சந்தேகங்கள் ஏற்பட்டுள்ளதாக கருத்துகள் வெளியாகி உள்ளன.
அரசாங்கத்தின் திட்டமிட்ட தொடர் சதியின் உச்சம் சிறிதரனின் கிளிநொச்சி அலுவலகத்தில் வெடி பொருட்கள்மீட்பு - இணைப்பு 1
12-01-2013 - 11 :12
அரசாங்கத்தின் திட்டமிட்ட தொடர் சதியின் உச்சமாக சிறிதரனின் கிளிநொச்சி அலுவலகத்தில் வெடிபொருட்கள் மீட்கப்பட்டுள்ளது. இந்த வெடி பொருள் மீட்பை அரசாங்க புலனாய்வுப் பிரிவு பொலிஸார் உறுதிப்படுத்தி உள்ளனர்.. இதனை அடுத்து அங்கு அலுவலகத்திற்கு பொறுப்பாக இருந்த வேளமாலிகிதன் கைது செய்யப்பட்டு வாகனத்தில் தடுத்து வைக்கப்பட்டு உள்ளதாக உள்ளதாக குளோபல் தமிழ்ச் செய்திகளின் விசேட செய்தியாளர் கிளிநொச்சியில் இருந்து தெரிவித்துள்ளார்.
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரான சிறிதரனை சிக்க வைப்பதற்கு பல வழிகளில் அரசாங்கம் முயன்று வந்தது. ஈழப் போராட்டத்தை ஆதரத்து தனிநாட்டுக் கோரிக்கைக்கு வலுச் சேர்த்து இந்தியாவில் சிறீதரன் பேசினார் என முதலில் குற்றப்புலனாய்வுப் பிரிவினர் விசாரித்து சிக்க வைக்க முயன்றனர்.
பின்னர் அண்மையில் படையில் சேர்த்துக் கொள்ளப்பட்ட தமிழ்ப் பெண்கள் குறித்து ஊடகங்களுக்கு செவ்வி வழங்கினார் என குற்றப்புலனாய்வுப் பிரிவினர் விசாரித்து உள்ளே போட முயன்றனர்.
இவை தவிர அரசாங்க ஊடகங்கள் மற்றும் அரசினதும் புலனாய்வு மற்றும் பாதுகாப்பு அமைச்சின் ஆதரவுடன் இயங்கும் சில இணையங்களும் சிறீதரனை இலக்கு வைத்து தொடர்ச்சியான சேறடிக்கும் பிரச்சாரங்களை நடத்தி வந்தன.
அதில் குறிப்பாக அண்மையில் ஒரு செய்தியை பிரசுரித்திருந்தன. கிளிநொச்சியில் 15 வயது சிறுமி மீதான பாலியல் துஸ்பிரயோகம் தொடர்பான குற்றச்சாட்டில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினருக்கு பிடியானை பிறப்பிக்கப்பட்டு உள்ளதாக தகவல்களை வெளியிட்டு இருந்தன. எனினும் இது தொடர்பில் கூட்டமைப்பின் எந்த நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் பிடிவிறாந்து பிறப்பிக்கப்படவில்லை என்பதனை கூட்டமைப்பு உறுதி செய்திருந்தது.
இவ்வாறு பல்வேறு நெருக்கடிகளை கொடுத்து வந்த அரசாங்கம் பாதுகாப்பு அமைச்சு மற்றும் அவர்களின் பாதுகாப்பு படைகள் புலனாய்வு கட்டமைப்புகள் இறுதியில் அலுவலகத்தில் வெடிபொருட்கள் என்ற நாடகத்தை அரங்கேற்றி இருப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் குளோபல் தமிழ்ச் செய்திகளிற்கு தெரிவித்தார்.
முன்னர் தேர்தல் காலத்தில் தமக்கு ஆதரவாகத் தொழிற்பட்ட 2 பிள்ளைகளின் தந்தையான வசந்தன் என்பவர் நீண்டகாலம் தம்முடன் தொடர்பற்று இருந்ததாகவும் திடிரென இன்று அவரை விலங்கிட்டு அழைத்துச் சென்ற புலனாய்வுப் பொலிசார் அவரிடம் இருந்து சில வெடிபொருட்கள் மீட்கப்பட்டதாகவும் முன்னர் இவர் சிறீதரனுடன் வேலைசெய்ததாகவும் குறிப்பிட்டு அலுவலகத்தை சோதனையிட போவதாக தெரிவித்தனர் என சிறீதரன் குளோபல் தமிழ்ச் செய்திகளிற்கு தெரிவித்தார்.
அதன் பின் அலுவலகத்தை சோதனையிட்டு சமையல் அறையில் சிறு பொதி ஒன்றை மீட்டு உள்ளதுடன் அவரது ஊடகச் செயலாளர் பொன்காந்தன் உள்ளிட்டவர்களை தடுத்து வைத்து விசாரனை செய்வதுடன் வேளமாலிகிதனை வாகனத்துள் வைத்து விசாரிப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது. அத்துடன் தற்போதும் இலங்கை நேரம் மலை 6 மணிவரை (12.01.13) சிறீதரனின் அலுவலகத்தில் தேடுதல் தொடர்கிறது.
ஏற்கனவே கடந்த பல வாரங்களுக்கு முதல் கடந்த டிசம்பர் 4ஆம் திகதி தனது கிளிநொச்சி அலுவலகத்திற்கு கொடுக்கப்பட்டு இருந்த பொலிஸ்பாதுகாப்பு விலக்கப்பட்டதாக சிறீதரன் தெரிவித்தார்.
இது குறித்து சபாநாயகர், பொலிஸ்மா அதிபர், வடக்கின் பிரதி பொலிஸ்மா அதிபர் உள்ளிட்ட அரசாங்கத்தின் முக்கிய கட்டமைப்புகளுக்கு முறைப்பாடு செய்தும் இதுவரை பொலிஸ் பாதுகாப்பை மீள வழங்கவில்லை என எமக்கு தெரிவித்த சிறீதரன், தான் பாராளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டு அலுவலகம் திறந்து செயற்பட்ட 3 வருடங்களாக கொடுக்கப்பட்ட பொலிஸ் பாதுகாப்பு திடிரென காரணம் இன்றி வாபஸ் பெறப்பட்டதாக தெரிவித்தார். அந்த 3 வருடங்கள் அலுவலகத்தில் இல்லாத வெடிபொருள் திடிரென சமையலறைக்குள் இப்போ வந்துள்ளதாகவும் குளோபல் தமிழ்ச் செய்திகளிடம் சுட்டிக் காட்டினார்.
இதேவேளை வன்னியில் தமது அரசியல் நடவடிக்கைகளை விஸ்தரிப்பதற்காக தவிக்கும் பல அரச சார்பு கட்சிகளுக்கு சிறீதரனின் அரசியல் நடவடிக்கைகள் பெரும் தடையாக இருப்பதாகவும் அதனால் வன்னியில் குறிப்பாக கிளிநொச்சியில் தமது அரசியலை நிலை நிறுத்துவதாயின் சிறீதரனை முடக்க வேண்டும் என பலர் அரசாங்கத்துடன் இணைந்து முழு மூச்சாக தொழிற்பட்டதாகவும் கிளிநொச்சியின் பெயர் குறிப்பிட விரும்பாத சமூக ஆர்வலர்கள் குளோபல் தமிழ்ச் செய்திகளிற்கு தெரிவித்தனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக