திங்கள், 4 பிப்ரவரி, 2013

தமிழகத்தின் கருத்துக் குறித்து அலட்டிக்கொள்ளவில்லை! இலங்கை அரசாங்கம்!

இந்திய மத்திய அரசாங்கத்துடனேயே இலங்கை அரசாங்கம் இருதரப்பு செயற்பாடுகளை முன்னெடுத்து வருகின்றது. நாம் மத்திய அரசுடனேயே இராஜதந்திர நகர்வுகளில் ஈடுபடுகின்றோம். எனவே தமிழ்நாடு மாநிலம் இலங்கை தொடர்பில் கூறுகின்ற விடயங்கள் குறித்து நாங்கள் அலட்டிக்கொள்ளவில்லை என்று இலங்கையின் ஊடகத்துறை அமைசர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார்.இலங்கை மீது பொருளாதாரத் தடைகள் விதிக்க வேண்டும் என்று தமிழக ஆளுநர் ரோசய்யா தெரிவித்துள்ளமை குறித்து விபரிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் இது குறித்து மேலும் கூறியதாவது:

இலங்கை மீது பொருளாதாரத் தடைகள் விதிக்க வேண்டும் தமிழக ஆளுநர் கூறியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதனை ஒரு விடயமாக கருதி நாங்கள் பதிலளிக்க வேண்டிய அவசியமில்லை.

மாநில மட்டத்தில் உள்ளவர்கள் அவ்வப்போது அவர்களின் தேவையைக் கருதி இவ்வாறான கூற்றுக்களை வெளியிடுவார்கள். அவை குறித்து நாங்கள் அலட்டிக்கொள்ள வேண்டியதில்லை.

காரணம் இந்தியாவின் மாநில அரசாங்கம் ஒன்றுடன் எமக்கு எந்தவிதமான இராஜதந்திர தொடர்புகளும் கிடையாது. அவ்வாறு இந்தியாவின் மாநிலம் ஒன்றுடன் இலங்கை தொடர்புகளைப் பேணாது.

இலங்கையின் தொடர்புகள் அனைத்தும் இந்திய மத்திய அரசாங்கத்துடனேயே இருக்கின்றது. எமது இராஜதந்திர உறவுகள், இருதரப்பு உறவுகள் என அனைத்தையும் மத்திய அரசாங்கத்துடனேயே மேற்கொண்டு வருகின்றோம்.

இந்திய மத்திய அரசாங்கம் இலங்கையுடன் எப்போதுமில்லாதவாறு நெருக்கமான உறவைக் கொண்டுள்ளது.

இந்தியப் பிரதிநிதிகள் இலங்கை வருகின்றனர். இலங்கைப் பிரதிநிதிகள் இந்தியா செல்கின்றனர்.

அந்தவகையில் எமது இருதரப்பு உறவானது பாரியளவில் வலுவடைந்து வருகின்றது.

இவ்வாறு இந்திய மத்திய அரசாங்கத்துடன் எமது உறவு வலுப்பட்டு இருக்கும்போது மாநில அரசாங்கம் கூறுகின்ற விடயங்களை நாங்கள் கவனத்தில் கொள்ள வேண்டிய அவசியமில்லை என்றார் கெஹலிய

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக