வெள்ளி, 15 பிப்ரவரி, 2013

மக்களுடன் இணைந்து உண்ணாவிரதம் இருந்தார் எதிர்க்கட்சி தலைவர்!

வலி.வடக்கு இடம்பெயர்ந்தோர் மீள்குடியேற்றக் குழு ஏற்பாடு செய்துள்ள உண்ணாவிரத போராட்டம் ஆரம்பமாகியுள்ளதுடன் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக்கட்சியின் தலைவர் ரணில் விக்ரம சிங்க அந்த உண்ணாவிரத போராட்டத்தில் சற்று முன்னர் இணைந்துக்கொண்டுள்ளார். இந்த உண்ணாவிரத போராட்டம் தெல்லிப்பழை துர்க்கை அம்மன் ஆலய முன்றலில் இன்று வெள்ளிக்கிழமை காலை ஆரம்பமானது. வலி.வடக்கில் இருந்து 1990 ஆம் ஆண்டு இராணுவத்தினால் வெளியேறிய மக்கள் 23 வருடங்கள் கடந்த நிலையிலும் மீள்குடியேற்றப்படாமல் முகாம்களிலும் தனியார் காணிகளிலும் ,உறவினர்களுடைய வீடுகள் என வசித்து வருகின்றனர் அவர்களை தங்களுடைய சொந்த இடங்களில் மீள்குடியேற்ற கோரியும் அங்கிருந்து படையினரை வெளியேறுமாறு கோரியுமே இந்த உண்ணாவிரத போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
யுத்தம் முடிவடைந்து 4 வருடங்கள் ஆகியும் உயர்பாதுகாப்பு வலையம் என்ற போர்வையில் நிலங்களை இராணுவத்தினர் ஆக்கிரமித்துள்ளனர். எனவே சொந்த நிலங்களில் குடியமர்த்தி எமது தொழில்களையும் சுதந்திரமாக மேற்கொள்வதற்கு அனுமதிக்க வேண்டும் என்று உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோர் வலியுறுத்தியுள்ளனர். 'வாழ்வு உரிமைக்கான உண்ணாவிரத போராட்டம் என்ற பதாதையின்' கீழ் தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவைசேனாதிராஜா, சுரேஷ் பிரேமச்சந்திரன், எம்.சுமந்திரன், ஸ்ரீதரன், ஈ.சரவணபவன், செல்வம் அடைக்கலநாதன் ஆகியோரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன், சித்தார்த்தன் ஆகியோரும் கொழும்பு மாநகரசபையின் முன்னாள் பிரதி மேயர் உள்ளிட்ட தென்னிலங்கையை பிரதிநித்துவப்படுத்தும் அரசியல் பிரதிநிதிகளும் கலந்துகொண்டுள்ளனர்.
இந்த உண்ணாவிரத போராட்டத்தில் பங்கேற்றுள்ள மக்கள் 'மனித உரிமை பேசும் அரசே மக்கள் உரிமையை பறிக்காதே', 'பாதுகாப்பு வலயம் என்று கூறி சிங்கள சகோதரர்களை குடியேற்றாதே', 'மீள்குடியேற்றம் என்று கூறி உலகை ஏமாற்றாதே', ' அரசே மக்கள் ஜனநாயக்தை மதித்து நட' போன்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகளையும் ஏந்தி இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றுள்ளனர். இந்த ஆர்ப்பாட்டம் இன்று மாலை நான்கு மணிக்கு நிறைவடையும் என ஏற்பாட்டுக்குழு அறிவித்துள்ளது.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக