ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க தலைமையிலான குழுவினர் இன மோதல்களைத் தூண்ட முயற்சித்து வருவதாக பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். குறிப்பாக யாழ்ப்பாண குடாநாட்டில் வாழ்ந்து வரும் தமிழ் மக்களின் இன உணர்வுகளைத் தூண்டி அதன் மூலம் அரசியல் நடாத்த ரணில் குழு ஆயத்தமாகி வருவதாகக் குறிப்பிட்டுள்ளார். யுத்தத்தின் பின்னர் படையினரும் அரசாங்கமும் மேற்கொண்டு வரும் அபிவிருத்திப் பணிகளை மறந்து ரணில் தரப்பினர் குற்றச்சாட்டுக்களை சுமத்தி வருவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். தந்திரோபாய மற்றும் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த நிலைகளிலிருந்து படையினர் வாபஸ் பெற்றுக்கொள்ளப்பட மாட்டார்கள் எனவும், அரசியல் அழுத்தங்களுக்கு அடிபணியப் போவதில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். வன்னி முன்னரங்கப் பகுதிகளில் படையினர் புலிகளுக்கு எதிராக போராட்டத்தை நடாத்தமலிருந்தால் ரணில் தரப்பினர் தெல்லிப்பழையில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தியிருக்க முடியாது என அவர் குறிப்பிட்டுள்ளார். தமிழீழ விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டின் கீழ் குறித்த பிரதேசங்கள் காணப்பட்ட போது மக்கள் எவ்வாறான நெருக்கடிகளை அனுபவித்து வந்தார்கள் என்பதனை அனைத்து தரப்பினரும் மறந்து விட்டார்கள் எனஅவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ரணில் நண்பரான சார்லி மகேந்திரனின் வீட்டை புலிகள் பயன்படுத்தி வந்தார்கள், அந்த வீட்டை இராணுவத்தினர் பின்னர் பயன்படுத்தினார்கள் எனவும், குறித்த பூர்வீக வீட்டை மீட்டுத் தருமாறு ரணில் தம்மிடம் கோரியதாகவும் கோதபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். தமது பணிப்புரைக்கு அமைய படையினர் சார்லி மகேந்திரனின் பூர்வீக வீட்டை விட்டு வெளியேறியதாகவும், இவ்வாறு புலிகள் இல்லாதொழிக்கப்பட்டதன் மூலம் ரணிலும் அவரது சகாக்களும் பல நன்மைகளை அடைந்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். எதிர்க்கட்சியின் ஒரு தரப்பினர் அரசாங்கத்திற்கு எதிரான பிரச்சாரங்களை முன்னெடுப்பதில் தீவிரம் காட்டி வருவதாகத் தெரிவித்துள்ளார்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக