செவ்வாய், 23 ஏப்ரல், 2013

தமிழர்களின் குடியிருப்புக்களுக்கு தீ வைத்தவர்களை சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும்: ஜனாதிபதியிடம் கூட்டமைப்பு கோரிக்கை!

News Serviceமுள்ளியவளையில் தமிழ் மக்களின் குடியிருப்புக்கள் தீ வைத்து எரிக்கப்பட்டமையின் பின்னணியில் உள்ள சூழ்ச்சிக்காரர்களை கண்டுபிடித்து அவர்களை சட்டத்தின் முன் நிறுத்த வேண்டுமென ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவிடம் கோரிக்கை விடுக்கும் தமிழ் தேசிய கூட்டமைப்பு. இவ்விடயம் தொடர்பாக இலங்கையிலுள்ள ஐ.நா. மனித உரிமை ஆணைக்குழுவின் வதிவிடப் பிரதிநிதியுடனும் பேச்சுவார்த்தைகளை நடத்தவுள்ளதாகவும் அறிவித்தது. முல்லைத்தீவு முள்ளியவளையில் தமிழ் மக்களின் குடியிருப்புக்கள் தீ வைத்து எரிக்கப்பட்டமை தொடர்பில் கேட்ட போதே தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா இதனைத் தெரிவித்தார்.
இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,
வடக்கில் தமிழ் மக்களின் நிலங்கள் அபகரிக்கப்படும் சூழ்நிலையில் மறுபுறம் மீள்குடியேறிய மக்களின் வீடுகள் இனந்தெரியாதோரால் தீக்கிரையாக்கப்படுகின்றன. இவ்வாறு தமிழ் மக்களை நிம்மதியாக வாழவிடாது தொடர்ந்தும் பந்தாடப்படும் நிலைமை தொடர்கிறது. தமிழ் மக்களும் இந்நாட்டு பிரஜைகளே. எனவே அவர்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டியது நாட்டின் தலைவரான ஜனாதிபதியின் பொறுப்பாகும். எனவே இத் தீ வைப்பு சம்பவம் தொடர்பில் நீதியான விசாரணைக்கு ஜனாதிபதி உத்தரவிட வேண்டும். அத்தோடு குற்றவாளிகளை சட்டத்தின் முன் நிறுத்தி தமிழர்களுக்கு எதிரான சதிகாரர்களின் முகத்திரையை கிழிக்க வேண்டும். அத்தோடு தமிழர்களுக்கு எதிராக தொடரும் வன்முறைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்து தமிழ் மக்களுக்கு பாதுகாப்பை வழங்க ஜனாதிபதி நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். அதேவேளை எமது தலைவர் சம்பந்தன் பாராளுமன்றத்தில் முள்ளியவளை தீ வைப்பு சம்பவம் தொடர்பில் விசேட உரை நிகழ்த்தவுள்ளார். இனந்தெரியாத நபர்களின் தாக்குதலுக்கு தமிழ் மக்களை தொடர்ந்தும் பலியாக்க முடியாது. தமிழர்களுக்கு எதிரான இந்த இனந்தெரியாதவர்கள் யாரென்பதை நாட்டுக்கு வெளிச்சம் போட்டுக் காட்ட வேண்டுமென்றும் மாவை சேனாதிராஜா எம்.பி. தெரிவித்தார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக