2009ஆம் ஆண்டு மே மாதம் வரையில் இலங்கையின் வடக்கில் முள்ளிவாய்க்கால்வரை கொல்லப்பட்ட அப்பாவித் தமிழ் மக்களை நினைவுகூர்ந்தால் இன்னொரு முள்ளிவாய்க்கால் வழங்கப்படும் என்று இலங்கை அரசின் புலனாய்வுத்துறையினர் வன்னியில் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளனர். ஆனால் முள்ளிவாய்க்காலில் உயிர் நீத்த தமது உறவுகளை நினைவு கூர்ந்து அஞ்சலி செலுத்துவதற்கு தமிழ் மக் களுக்கு எந்தத் தடையும் கிடையாது என்று இலங்கை இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ருவான் வணிகசூரிய தெரிவித்துள்ளார்.
2009ஆம் ஆண்டு மே 18 ஆம் திகதி முள்ளிவாய்க்காலில் ஆகுதியான உறவுகளை நினைத்து முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகள் தமிழ் மக்களால் அனுஷ்டிக்கப்படவுள்ளன.
தமிழர் தாயகப் பகுதிகளிலும், புலம்பெயர் நாடுகளிலும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகள் நாளை உணர்ச்சிபூர்வமாக அனுஷ்டிப்பதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
நினைவு கூறத் தடையில்லை
ஆயினும் தாயகத்தில் இந்த நிகழ்வுகளை நடத்துவதற்கு அச்சுறுத்தல்கள் ஏதும் விடுக்கப்பட்டிருக்கிறது. இது குறித்து இராணுவப் பேச்சாளரிடம் கேட்டபோது,
"எந்தத் தடையும் இல்லை. அவர்கள் வழிபாடு செய்ய முடியும். அதற்கு இராணுவத்தினர் எந்த வகையிலும் தடையாக இருக்கமாட்டார்கள். ஆனால் தமிழீழ விடுதலைப் புலிகளை நினைவு கூர்வதற்கு இடமளிக்கப்படமாட்டாது'' என்றார் அவர்.
இராணுவப் புலனாய்வுத்துறையின் கடும் அச்சுறுத்தலின் மத்தியில் நாளை முள்ளிவாய்கால் போரில் இறந்த மக்களுக்கு அஞ்சலி செலுத்தப்படவுள்ளது.
யாழ்ப்பாணத்தில் அஞ்சலி
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பால் யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள தமிழரசுக் கட்சி அலுவலகத்தில் அனுஷ்டிக்கப்படவுள்ளது.
2009 ஆம் ஆண்டு இடம்பெற்ற இறுதிக்கட்டப் போரில் தமது உயிர்களை ஆகுதியாக்கிக் கொண்டவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகள் அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றன.
நாளை சனிக்கிழமை உறவுகளை நினைத்து ஆலயங்களில் விசேட வழிபாடுகளை மேற்கொள்வதுடன், வீடுகளில் தீபமேற்றி அஞ்சலி செலுத்துமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சேனாதிராசா அழைப்பு விடுத்திருந்தார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஏற்பாட்டில் வவுனியாவில் நாளை முற்பகல் 10 மணிக்கும், யாழ்ப்பாணத்தில் மாலை 5 மணிக்கும் நினைவேந்தல் நிகழ்வுகள் அனுஷ்டிக்கப்படவுள்ளன.
யாழ்ப்பாணம், மார்ட்டீன் வீதியில் அமைந்துள்ள தமிழரசுக் கட்சியின் அலுவலகத்திலேயே இந்த நிகழ்வு இடம்பெறவுள்ளது..
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக