வெள்ளி, 4 அக்டோபர், 2013

ஜனாதிபதி முன் சத்தியப்பிரமாணம் மக்கள் கருத்துக்கு முரணானது!

பி.பி.சி.தமிழோசைக்கு புளொட் தலைவர் சித்தார்த்தன் தனது கருத்தை பகிர்ந்து கொண்டுள்ளார் அதை நாம் எமது வாசகர்களுக்காக தருகிறோம்.வட மாகாண முதல்வர், யாரிடம் பதவிப் பிரமாணம் செய்து கொள்வது என்பது குறித்து, தமிழ் தேசியக் கூட்டமைப்புக்குள் கருத்து வேறுபாடு நிலவியதாக வரும் செய்திகளில் உண்மை இருக்கிறதா? பதிலளிக்கிறார் கூட்டமைப்பின் சார்பாக வடமாகாண சபைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டவரும், புளட் அமைப்பின் தலைவருமான தர்மலிங்கம் சித்தார்த்தன்.
வடமாகாண சபையின் உறுப்பினர்கள் இலங்கை ஜனாதிபதியின் முன்பாக சத்தியப் பிரமாணம் செய்வது தொடர்பாக கட்சிக்குள் இரு வேறு வகையான கருத்துக்கள் இருந்தாலும், வடமாகாண மக்களில் பெரும்பாலானோர் அரசுக்கு எதிராகவே வாக்களித்திருக்கிறார்கள் என்பதால், ஜனாதிபதியின் முன்பாக சத்தியப் பிரமாணம் செய்யக் கூடாது என்ற கருத்துக்கே ஆதரவு அதிகமாக இருப்பதாகவும், தாமும் அதனையே ஆதரிப்பதாகவும் சித்தார்த்தன் கூறியுள்ளார்.
ஆனாலும் சுமூகமான ஆரம்பத்தை நோக்கியதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் செயற்பாடு இருக்க வேண்டும் என்று சர்வதேச சமூகமும் ஏனைய பலரும் கேட்டிருப்பதாக இரா. சம்பந்தன் அவர்கள் கூறியிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இந்த விடயத்தை மக்கள் உணர்வுபூர்வமாகப் பார்ப்பதால், கட்சிகளும் அதனையே பிரதிபலிப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இந்த நிலையில் தாங்கள் சிங்கள அரசிடம் சரணாகதி அடைந்து விட்டோம் என்ற கருத்து மக்கள் மனதில் ஏற்பட்டுவிடும் என்பதுதான் தமது கவலை என்றும் அவர் குறிப்பிட்டார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக