வியாழன், 28 நவம்பர், 2013

இலங்கையில் நடந்தது என்ன?கவிஞர் ஜெயபாலன்

இலங்கையில் நடந்தது என்ன? நார்வே போய்ச் சேர்ந்த கவிஞர் ஜெயபாலன் விளக்கம்!விசா விதிகளை மீறியதாக இலங்கையில் கைது செய்யப்பட்ட ஈழத்துக் கவிஞர் வா.ஐ.ச.ஜெயபாலனை நார்வேக்கு நாடு கடத்தியது இலங்கை அரசு.
தனக்கு இலங்கையில் நேர்ந்தது என்னவென்பது குறித்து அவர் விரிவாக எழுதியுள்ளார்.
இலங்கையில் நடந்தது என்ன?
நார்வே போய்ச் சேர்ந்த கவிஞர் ஜெயபாலன் விளக்கம்!
ஜெயபாலன் தன் முக நூல் பக்கத்தில் வெளியிட்டுள்ள நீண்ட விளக்கம்:
நவம்பர் 6ம் தேதி அம்மாவின் நினைவு தினம். நவம்பர் 8ம் தேதி பின்வரும் சேதியை என் முகநூலில் வெளியிட்டேன்.
''இன்று என் அம்மாவின் 7வது வருட நினைவு தினம். அம்மாவின் மரணத்துக்கு முதல்நாள் தொலைபேசியில் பேசியபோது எனக்கு என்ன நடந்தாலும் வந்துவிடாதே என கத்தி சத்தியம் வாங்கினார். இன்று அம்மாவின் நினைவுதினம். அம்மாவின் சமாதிக்கு வணக்கம் செலுத்தும் ஆசை மீண்டும் மூண்டெரிகிறது. இராணுவ முகாமாக இருக்கும் எங்கள் பண்ணைக்குள் அம்மாவின் சமாதி இருக்கு. இந்த வாரம் அம்மாவின் சமாதியில் என் கண்ணீர் மலர் வளையம் சாத்தி நம் அம்மாக்களின் வாழ்வை காவியமாக எழுத ஆரம்பிப்பேன். இதை தவிர்த்திருந்து வேறு என்ன பெரிய சாதனை செய்து விடப்போகிறேன்'
நான் ஒரு முடிவு எடுத்துவிட்டால் அஞ்சுகிறவனல்ல. அது என் தோழர்களுக்கு தெரியும். 1967ல் சாதிப் போராட்டக் களங்களில் தோழனான புதுவை இரத்தினதுரை என்னை எப்போதும் தேச பக்தனும் கலகக்காரனுமான கவிஞன் என்றே அழைப்பார்.
பொட்டம்மானை விடுவித்தது:
1984ல் புளொட் இயக்கம் பொட்டம்மானை பட்டுக்கொட்டையில் வைத்துக் கைதுசெய்தபோது நான் முகுந்தனில் அலுவலகத்துக்குள் புகுந்து செய்த கலாட்டாவை அப்போது அங்கிருந்த தோழர் சிவா சின்னப்பொடி அறிவார். கொலைகாரன் டம்பிங் கந்தசாமியிடம் என்னைக் கொல்ல சொல்வதா அல்லது பொட்டம்மானை விடுதலை செய்வதா என முதலில் குழம்பிய முகுந்தன் இறுதியில் பொட்டம்மானை விடும்படி உத்தரவிட்டார். இதை இறுதிவரை பொட்டம்மான் மறக்கவில்லை என்பதை நான் அறிந்திருந்தேன்.
பிரபாகரனைத் தடுத்தது:
1990ல் முஸ்லிம்களை குழப்புகிறேன் என்ற குற்றச்சாட்டில் மட்டக்களப்பில் வைத்து கரிகாலனும், டேவிட்டும் என்னை கடத்தினார்கள். முஸ்லிம் மக்கள் தொடர்பான என் நிலைபாட்டை மாற்றிக்கொள்ள மறுத்தேன். கருணா என்னை வந்து பார்த்தபோது வன்னிக்கு அறிவிக்காமல் எந்த முடிவும் எடுக்கக்கூடாது என சத்தியம் வாங்கினேன். ஒரிரு நாட்க்களின் பின்னர் கிரான் சுடலைக்கு மண்வெட்டி சகிதம் அழைத்துச் சென்றபோது இறுதி நேரத்தில் பொட்டம்மான் தலையிட்டு என்னை விடுவித்தார்.
கருணா பிரிந்தபோது 'மட்டக்களப்பு போராளிகளை சுட பிரபாகரனுக்கு மக்கள் ஆணை இல்லை. பிரபாகரன் அவர்களை வீடுகளுக்கு போகும்படி சொல்லல்லாம்,' என அறிக்கை வெளியிட்டேன். குளோபல் செய்தி குமரகுருபரன் இந்த அறிக்கையை உடனேயே சூரியன் எப்எம்மில் ஒலிபரப்பினார். வீரகேசரி வாரமலரும் அதனை வெளியிட்டது. பின்னர் வன்னிக்கு சென்றபோது உறவினர்களும் நண்பர்களும் செத்தவீடு கொண்டாடினார்கள். எனினும் வன்னியில் எனது நிலைபாட்டை ஏற்றுக்கொண்டார்கள். நானும் அவர்கள் கேட்ட சில உதவிகளைச் செய்தேன்.
மனைவிக்கும் சொல்லாமல்...
இதுபோலத்தான் நான் இலங்கைக்கு போகும் முடிவையும் சென்ற 8ம் தேதி அன்று எடுத்தேன். தடுத்துவிடுவாள் என்பதால் என் பயணம் பற்றி இறுதிவரை மனைவிக்கும் சொல்லவில்லை.நான் இலங்கை வரும் செய்தியை அறிந்து தோழர் தலைவர் ரவ்கக்கீம் என் கடவு சீட்டு இலக்கத்தை கேட்டு பெற்றுக்கொண்டார். விமான நிலையத்தில் சிக்கல் இருக்கவில்லை.
கொழும்பிலிம் யாழிலும் பல நிகழ்வுகளுக்குக்குப் பின்னர் 22.11.13 மாலை ராணுவம் கைப்பற்றி வைதிருக்கும் எங்கள் குடும்பப் பண்ணையில் உள்ள எங்கள் அம்மாவின் சமாதிக்கு அஞ்சலி செலுத்தச் சென்றேன். மறுநாள் காலை முள்ளிவாய்க்கால் செல்ல திட்டமிட்டிருந்தேன்.
புலனாய்வாளர் என் தொடர்புகள் கருத்துக்கள் என்னைச் சந்திப்பவர்கள் மற்றும் என் பயணத்தடங்கள்போன்ற சகலதையும் எனதும் என்னோடு தொடர்புகொள்கிறவர்களதும் மொபைல் போண்கள் மூலம் கண்காணித்து வந்துள்ளனர்.
தடுப்பு:
அம்மாவின் சமாதிக்கு 3 கிலோமீட்டர் முன்னே வன்னிவிளான்குளம் கோவில்முன்றலில் வைத்து இலங்கை பயங்கரவாத தடை பிரிவு (TID) என்னை தடுத்தது. சுற்றுலா விசாவில் குடிவரவு சட்டத்தை மீறி நாட்டுக்கெதிராக செயல்பட்டது, இன நல்லிணக்கத்துக்கு பங்கம் விழைவிக்கும் வகையில் ஊடகங்களுக்கு பேட்டி கொடுத்தது என குற்றம் சாட்டினார்கள். தமிழ் முஸ்லிம் மக்களை ஒன்றுபடுத்தி வடகிழக்கு மாகாணங்களில் போராடத்தை ஆரம்பிக்கும் நோக்கம் எனக்கிருக்கக்கூடும் என அவர்கள் அஞ்சினார்கள்.
கைதா என கேட்டதற்கு தடுப்புக் காவல் என்றார்கள். அதனால் என் தொலைபேசியை அவர்கள் பறிக்கவில்லை. மேலும் என் தொலைபேசிதான் என் தொடர்பு வலைப்பின்னலைக் கண்காணிக்க அவர்களுக்குள்ள ஒரே சாதனமாகவும் இருந்தது.
அம்மா சமாதிக்கு போவதில் உறுதி:
நான் உறுதியாக அம்மாவின் சமாதிக்கு போகவேணும் என்றேன். சாத்தியமில்லை என்றார்கள். நான் என் உச்சத்தாயியில் 'சுடுகிறதென்றால் சுடு கொல்வதென்றால் கொல்.. அம்மாவின் சமாதிக்கு போகாமல் நான் எங்கும் வரமாட்டேன்' என கத்தினேன். நான் எதிர் பார்த்ததுபோலவே சம்பவத்துக்குச் சாட்ச்சியாக என்னை நன்கறிந்த வன்னி விளான்குள மக்கள் வேலிகளுக்கும் வீதிக்கும் வந்துவிட்டார்கள்.
மீண்டும் டிடிஐ அலுவலர்கள் அம்மாவின் சமாதிக்கு போகமுடியாது என்றார்கள். நான் ஒன்றில் அம்மாவின் சமாதிக்கு போய்விட்டு விசாரணைக்கு வருகிறேன் அல்லது என்னைச் சுட்டுவிட்டு சடலத்தை விசாரணைக்கு எடுத்துச் செலுங்கள் என கத்தினேன்.
சம்பவம் நடந்துகொண்டிருக்கும்போதே வன்னிவிளான்குள மக்கள் நார்வேயில் வசிக்கும் சுந்தரலிங்கம் கணபதிப் பிள்ளைக்கு தகவல் சொல்லி விட்டார்கள். நல்லகாலமாக அவர் உடனேயே குளோபல் தமிழ் குருபரனுக்கு செய்தி கொடுத்துவிட்டார். நான் பசீர் சேகுதாவுத்துக்கு செய்தி சொன்னேன். சேதி உலகெல்லாம் பரவ ஆரம்பித்தது. இதுபற்றி டிடிஐ அலுவலர்களுக்கும் தகவல் கிடைத்தது. அவர்கள் உறுதி தளர ஆரம்பித்தது.
சமாதிக்கு செல்ல அனுமதி:
இறுதியில் என்னை அம்மாவின் சமாதிக்கு அழைத்துச் செல்ல உடன்பட்டார்கள். முன்னர் இராணுவ முகாமாய் இருந்து தற்போது இராணுவ சிவில் பிரிவின் கட்டுப்பட்டில் இருக்கும் எங்கள் பண்ணைக்கு அழைத்துச் செல்லப்பட்டேன். அம்மாவின் சமதியை கண்டுபிடிக்க முடியவில்லை. ஒரு குறிப்பில் கற்பூரம் கொளுத்தி வணங்கினேன். பின்னர் என்னை விசாரணைக்காக வவுனியா அழைத்துச் சென்றார்கள்.
வழியில் மாங்குளம் போலிஸ் நிலையத்தில் ட்ரக் வண்டியில் இருந்த என்னுடன் மாங்குளம் பொலிஸ் அதிகாரி முரட்டுதனமாக பேசினார். நானும் அதே பாணியில் பதிலளித்தேன். ஆனாலும் பயங்கரவாத விசாரணைப் பிரிவினர் (TID) அவரை என்னுடன் தொடர்ந்துபேச அனுமதிக்கவில்லை.
சுந்தரலிங்கத்துக்கும் குமரகுருபரனுக்கு நன்றி. வவுனியா செல்ல முன்னமே என் கைது சர்வதேச செய்தியாகிவிட்டிருந்தது பற்றி TID அலுவலகர்கள் ஆச்சரியமடைந்தார்கள். ஒரிரவு, ஒருகாலைப் பொழுது விசாரணைக்குப் பிறகு கொழும்பில் குடிவரவு பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டேன். உடனே விடுதலை சாத்தியமில்லை என தோன்றியது.
முதலில் நெஞ்சுவலியென்றதால் கழுபோவில வைத்தியசாலையில் தங்க வைக்கப்பட்டேன். மறுநாள் அங்குள்ள பொலிசார் எனக்கெதிராக நோயாளிகளை தூண்டி சதி செய்ததார்கள். அதிர்ஷ்டவசமாக அங்குவந்த குடிவரவு துறை அதிகாரி அமித் பெரரோ என்னை அங்கிருந்து குடிவரவு பிரிவின் வெளிநாட்டவர்களுக்கான தடை முகாமுக்கு அழைத்துச் சென்றார்.
என் விடுவிப்புக்கு வழி வகுத்த காரணிகள்..
1. அமைச்சக வளமைக்கு மாறாக அரசு குற்றம் சாட்டியிருந்த நிலையில் அதை வலுவாக்கவேண்டிய நீதி அமைச்சர் ரவ் ஹக்கீம் அரசின் கருத்துக்கு எதிராக நான் குற்றமிழைக்கவில்லை என்ற நிலைபாட்டை துணிச்சலுடன் எடுத்தது.
2. ராஜதந்திர வளமைக்கு மாறாக தோழர் எரிக் சோல்கைம் என்னை நியாயப்படித்தியதும். இலங்கை அரசுக்குச் சவாலாக உறுதியான எச்சரிக்கை விடுத்ததும். இது போர்குற்ற விசாரணை பற்றிய ஐநா மனித உரிமை ஆணையக கூட்டம் இடம்பெறவுள்ள சூழலில் இலங்கைக்கு ஒரு அதிர்ச்சி வைத்தியமாகும்.
3. பசீர் சேகுதாவுத்தின் அயராத ராசதந்திர முன்னெடுப்புகள்.
4.நார்வீஜிய அரசின் உறுதியான நடவடிக்கைகள்
5.இலங்கை ஒருபோதும் எதிர்பார்க்காத அளவுக்கு சர்வதேச ரீதியாக ஊடகங்களும் கலைஞர்களும் மனித உரிமை ஆர்வலர்களும் முன்னெடுத்த கிளர்ச்சிகள். இதில் தமிழ உறவுகளும் புலபம்பெயர்ந்த சமிழர்களும் பாசன மற்றும் மஞ்சுள வெடிவர்த்தன தலைமையில் சிங்கள தோழர்களும் முன்னணி வகுத்தார்கள்.
-இவ்வாறு எழுதியுள்ளார் கவிஞர் ஜெயபாலன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக