வெள்ளி, 4 ஜூலை, 2014

புலிகள் இயக்க தலைவர்கள் என நம்பப்படும் நால்வர் மலேசியாவில் கைதாம்!

Liberation Tigers of Tamil Eelamதமிழீழ விடுதலைப் புலிகளின் சிரேஸ்ட தலைவர்கள் என சந்தேகிக்கப்படும் நான்கு பேர் மலேசியாவில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த வியாழக்கிழமை மேற்கொள்ளப்பட்ட தேடுதல் வேட்டைகளின் போது சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கோலாலம்பூர் மற்றும் செலாங்குர் ஆகிய பகுதிகளில் பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினர் இந்த தேடுதலை நடத்தியுள்ளனர்.
சந்தேக நபர்களில் ஒருவர் குண்டு தொடர்பான நிபுணர் எனவும், இவரிடம் ஐக்கிய நாடுகள் அகதிகளுக்கான முகவர் நிறுவன அடையாள அட்டை காணப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
மற்றுமொரு விடுதலைப் புலி உறுப்பினர், முன்னாள் இலங்கை ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவை படுகொலை செய்ய முயற்சித்தவர் என தெரிவிக்கப்படுகிறது.
மூன்றாம் சந்தேக நபர் அண்மையில் இந்தியாவில் தாக்குதல் நடத்தத் திட்டமிட்ட சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டவரின் சகா எனத் தெரிவிக்கப்படுகிறது.
நான்காம் சந்தேகநபர் தமிழீழ விடுதலைப் புலிகளின் சார்பில் தகவல்களை திரட்டியவர் எனக் குறிப்பிடப்படுகிறது.
சந்தேக நபர்களிடமிருந்து பெரும் எண்ணிக்கையிலான கடவுச் சீட்டுக்கள் உள்ளிட்ட பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன.
இந்த ஆண்டில் கைது செய்யப்பட்ட 14 தமிழீழ விடுதலைப் புலிச் சந்தேக நபர்களில் ஏழு பேருக்கு ஐக்கிய நாடுகள் அகதிகள் முகவர் நிறுவனத்தின் அடையாள அட்டைகள் இருப்பதாக மலேசிய காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
சந்தேக நபர்களிடம் தொடர்ச்சியாக விசாரணை நடத்தப்படும் எனவும், கைது செய்யப்பட்டவர்களை நாடு கடத்துவது குறித்து இன்னமும் தீர்மானிக்கவில்லை எனவும் காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக