13வது திருத்த சட்டத்தை அரசாங்கம் அகற்ற முற்பட்டால் அரசிலிருந்து விலகுவேன்: பிரபா கணேசன் எச்சரிக்கை13வது திருத்த சட்டத்தை அரசாங்கம் அகற்ற முற்பட்டால் அரசாங்கத்திற்கான ஆதரவை வாபஸ் பெறுவேன் என அவர்களுக்கு சொல்லி வைக்க விரும்புகிறேன் என ஜனநாயக மக்கள் காங்கிரஸ் தலைவரும் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான பிரபா கணேசன் ஊடகங்களுக்கு தெரிவித்தார்.
13வது திருத்த சட்டத்தை ஆதரிக்கும் இடதுசாரி அமைச்சர்களான திஸ்ஸ விதாரன, டியூ குணசேகர, வாசுதேவ நாணயக்கார போன்றவர்கள் அரசாங்கத்தை விட்டு வெளியேற வேண்டுமென ஹெல உறுமய கட்சியினர் கேட்டுக் கொண்டுள்ளனர்.
இது தொடர்பாக மேலும் தெரிவித்ததாவது,
யுத்தம் முடிவுற்ற பின்பு சிங்கள மக்கள் தமிழ் பேசும் மக்களுடன் ஐக்கியமாக வாழ்ந்து அவர்களுக்கு அதிகார பரவலாக்கலை வழங்க தங்களை தயார்படுத்திக் கொண்டிருக்கும் நிலையில், 13வது திருத்த சட்டத்தை அகற்றக் கோரி ஹெல உறுமய, விமல் வீரவன்ச போன்றவர்கள் மீண்டும் இனவாதத்தை சிங்கள மக்கள் மத்தியில் ஏற்படுத்தி வருகின்றனர்.
அதே நேரம் ஊடகங்கள் மூலமாக 13வது திருத்த சட்டமான மாகாணசபை முறைமையை ஆதரிப்பவர்கள் அரசாங்கத்தை விட்டு விலக வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அரசாங்கத்திற்கும் ஆதரவளித்துக் கொண்டிருக்கும் பிற கட்சிகளான எங்களை அரசாங்கத்தை விட்டு வெளியேற சொல்வதற்கு இவர்களுக்கு எவ்வித அருகதையும் இல்லை. விமல் வீரவன்ச ஜே.வி.பியில் இருந்த பொழுது இக்கட்சி இனவாதம் பேசியது.அதேபோல் ஹெல உறுமய கடந்த முன்னைய பாராளுமன்ற தேர்தலில் இனவாதம் பேசி தனித்து போட்டியிட்டு அதிக ஆசனங்களை பெற்றுக் கொண்டது. இருப்பினும் இந்த இனவாத போக்கினால் கடந்த தேர்தலில் இவர்கள் ஒரு சில ஆசனங்களையே பெற்றுக் கொண்டனர். இனவாதம் பேசுபவர்களுக்கு இப்படியான முடிவே வரலாறாகும்.
அதே நேரம் அரசாங்கம் ஒரு போதும் 13வது திருத்த சட்டத்தை அகற்றுவதாக தெரிவிக்கவில்லை. ஜனாதிபதிக்கும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சிக்கும் ஒருபோதும் மாகாணசபை முறைமையை இல்லாதொழிப்பதற்கு விருப்பமில்லை என்பது எனக்கு தனிப்பட்ட முறையில் நன்றாகத் தெரியும். பங்காளி கட்சிகளின் கோரிக்கைகளை கட்டாயம் நிறைவேற்ற வேண்டிய அவசியம் பெரும்பான்மை பாராளுமன்ற ஆசனங்களை கொண்டிருக்கும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியினருக்கு தேவையில்லை.
அதே நேரம் தமிழ் மக்களுக்கு மேலும் அதிகார பரவலாக்கலை இந்நாட்டிலுள்ள தமிழ் மக்கள் எதிர்ப்பார்த்துக் கொண்டிருக்கும் வேலையில் 13வது திருத்த சட்டத்தை அகற்றினால் அரசாங்கத்துடனும் இருக்க வேண்டிய அவசியமும் எனக்கு தேவை இல்லை.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக