திங்கள், 19 நவம்பர், 2012

குடாநாட்டில் படைக்குறைப்பினை மேற்கொள்வதாக கூறும் பாதுகாப்பு தரப்பு புதிய முகாம்களை அமைப்பது அம்பலம்

யாழ்.குடாநாட்டில் படைக்குறைப்பினை மேற்கொள்வதாக கூறும் பாதுகாப்பு தரப்பு மறுபுறத்தே சத்தமின்றி தீவகப்பகுதிகளினில் படைகளை குவித்து வருகின்றமை அம்பலத்திற்கு வந்துள்ளது.யாழ்.குடாநாட்டில் சுமார் 40 ஆயிரம் வரையிலான படையினர் நிலைகொள்ள வைக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டு வருகின்ற போதும் அரச தரப்போ வெறுமனே 15 ஆயிரம் படையினரே நிலைகொள்ள வைக்கப்பட்டுள்ளதாக கூறுகின்றது.யாழ்ப்பாணத்தல் படைக்குறைப்பு முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் ஆனால் தமிழ் அரசியல்வாதிகளும் தமிழ் ஊடகங்களும் பொய்பிரச்சாரங்களில் ஈடுபட்டுவருவதாகவும் யாழ்.மாவட்ட இராணுவத்தளபதி மகிந்த கத்துருசிங்க அண்மையில் தெற்கு ஊடகவியலாளர்களிடையே உரையாற்றுகையினில் தெரிவித்துள்ளார்.
எனினும் யாழ்ப்பாணத்திலிருந்து வெளியேற்றப்படுவதாக கூறப்படும் படையினரை சத்தமின்றி மக்கள் நடமாட்டம் குறைவான தீவகப்பகுதிகளுக்கு மாற்ற நடவடிக்கைகள் எடுக்கப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.குறிப்பான 1990ம் ஆண்டினில் இடப்பெயர்விற்குள்ளான தீவகப்பகுதிகளில் பெரும்பாலும் மீள்குடியமர்வு திருப்திகரமாக முன்னெடுக்கப்பட்டிருக்கவில்லை.பெருமளவிலான வீடுகள் காணிகள் குடியிருப்புக்கள் அற்றதாகவேயுள்ளன.இதனை பயன்படுத்தியே இங்கு புதிய புதிய படைமுகாம்களை சத்தமின்றி அமைத்து அங்கு படையினரை குவித்து விடுவதினில் படைத்தரப்பு கூடிய ஆர்வம் காட்டிவருவதாக தெரியவருகின்றது.
மக்கள் மீள்குடியமர்வு திருப்திகரமாக இடம்பெறாத வேலணை-அராலி வீதிப்பகுதியினில் புதிய படைத்தளமொன்று அமைக்கப்பட்டு இங்கு படையினர் நிலைகொள்ள வைக்கப்பட்டுள்ளனர்.இதற்கென சீன உதவியின் கீழ் உடனடியாக பொருத்தப்படக்கூடியதான பொருத்துக்களை கொண்டு முகாம் அமைக்கப்பட்டுவருகின்றது.
யாழ்ப்பாணத்தில் படைக்குறைப்பு பற்றி பேசியவாறே யாழ்.நகரில் கைவிப்பட்ட சிங்கள மகாவித்தியாலய காணி மற்றும் அதனையண்டிய பகுதிகளிலும் அதே போன்று வடமராட்சியின் வல்லைப்பகுதியிலும் புதிய படை முகாம்;கள் அமைக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக