திங்கள், 3 டிசம்பர், 2012

மக்கள் எம்முடன் இருக்கும்வரை சர்வதேசத்தால் அரசாங்கத்தை கவிழ்க்க முடியாது! கண்டியில் ஜனாதிபதி சவால்

மக்கள் எம்மோடு இருக்கும் வரை சர்வதேச மட்டத்திலான எத்தகைய சூழ்ச்சிகள் மூலம் அரசாங்கத்தை ஒருபோதும் அசைக்க முடியாதென ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச அவர்கள் நேற்றுக் கண்டியில் தெரிவித்தார்.என்னையும், பாதுகாப்பு அமைச்சு செயலாளர் கோத்தபாயவையும் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் நிறுத்துவதற்கு வெளிநாடுகளில் பிரசாரங்கள் முன்னெடுக்கப்படுகின்றன.

சில அரசசார்பற்ற நிறுவனங்களும், புலம்பெயர்ந்த தமிழர் அமைப்புக்களும், தேசிய ரீதியில் சில சக்திகளும் டொலருக்கு சோரம்போய் இந்த நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றனரென்றும் ஜனாதிபதி கூறினார்.

நேற்று கண்டி குண்டசாலையில், நெடுஞ்சாலை அபிவிருத்திக்கான இயந்திர பராமரிப்புக் கட்டிடத்தை உத்தியோகபூர்வமாகத் திறந்து வைத்து உரையாற்றுகையிலேயே ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இந்நிகழ்வில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தொடர்ந்து உரையாற்றுகையில்,

நாம் மக்களுக்காகவும், நாட்டுக்காகவும் எம்மை அர்ப்பணித்து செயற்படுகின்றோம். அதை சகல மக்களும் நன்கு அறிவர். மக்கள் எங்களோடு இருக்குவரை எவரும் எம்மை வீழ்த்த முடியாது. அரசாங்கத்தை கவிழ்ப்பதற்காக சதி முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. எனினும், மக்கள் ஒருபோதும் அதை அனுமதிக்க மாட்டார்கள்.

நாம் நாட்டை அபிவிருத்தியில் கட்டியெழுப்பி வருகின்றோம். நாட்டின் அபிவிருத்திக்கு நெடுஞ்சாலைகளே உந்து சக்தியாக இருக்கின்றன. அதனாலேயே நாட்டில் முக்கிய நெடுஞ்சாலைகளை நாம் புனரமைத்து வருகின்றோம்.

யாழ்ப்பாணத்துக்குச் செல்வதற்கு நான்கு நெடுஞ்சாலைகள் நிர்மாணிக்கப்பட்டு வருகின்றன.

கண்டிக்கான அதிவேகப் பாதையின் நிர்மாணப் பணிகளை நாங்கள் அடுத்த வருடத்தில் ஆரம்பிக்கவுள்ளோம். பாதைகளின் அபிவிருத்தி மூலமே நாட்டில் அபிவிருத்திப் புரட்சியை எம்மால் வெற்றிகரமாக முன்னெடுக்க முடியும் என்பதே எனது நம்பிக்கை என்றார்.

அடுத்த ஆறு வருடங்களுக்கு ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவராகத் தெரிவு செய்யப்பட்டிருக்கும் ரணில் விக்ரமசிங்கவுக்கும் ஜனாதிபதி இங்கு தனது வாழ்த்துக்களைத் தெரிவித்திருந்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக