புதன், 30 ஜனவரி, 2013

"உலகத்துக்கு உண்மை தெரியும் இலங்கை பொய் பேச முடியாது-'ஜனநாயக மக்கள் முன்னணித் தலைவர் மனோ கணேசன்

monoganeshenதேசிய கீதம் தமிழ் மொழியில் பாடப்படுவது இந்நாட்டில் நீண்டகாலமாக நடைபெற்று வருகிறது. ஸ்ரீ லங்கா தாயே எனத் தொடங்கும் இந்தப் பாடல் தமிழீழத்தைப் பற்றிப் பாடவில்லை. அது ஸ்ரீ லங்கா என்ற முழு இலங்கையைப் பற்றித்தான் பாடுகிறது. இந்த தமிழ் மொழியிலான தேசிய கீதத்தை இன்று இருப்பது போலவே பாடவிட்டாலே நமக்குப் போதும்.
சிங்கள, தமிழ்ச் சொற்கள் அடங்கிய ஒரே தேசிய கீதம் என்ற புதிய யோசனையை எனக்குத் தெரிய தமிழர்கள் முன்வைக்கவில்லை. அதை முன்வைத்திருப்பது அமைச்சர் வாசுதேவ நாணயக்கார. அதை இந்த ஜெனீவா மார்ச் மாத காலப்பகுதியில் முன்வைத்து, அமைச்சர் சர்ச்சையை ஏற்படுத்திவிட்டார் என அவரை எதிர்த்து அரசாங்கத்தில் உள்ள தீவிரவாதக் கட்சிகளும் பொது பல சேனையும் திட்டுகின்றன.

இது அரசாங்க உள்வீட்டுப் பிரச்சினை. இன்று நிலவும் ஜெனீவா காய்ச்சல் காரணமாக மூளை கலங்கிப்போய் கண்டதையும் திட்டித்தீர்க்கும் இவர்களது இந்த வேலையைப்பற்றி நாம் ஒன்றும் செய்ய முடியாது என ஜனநாயக மக்கள் முன்னணித் தலைவர் மனோ கணேசன் தெரிவித்தார்.
அதிகாரத்தைப் பகிர்ந்து ஐக்கியப்படும் இயக்கம் நேற்று கொழும்பில் நடத்திய ஊடக மாநாட்டில் கருத்துத் தெரிவித்த மனோ கணேசன் மேலும் கூறியதாவது;

இந்நாட்டில் இன்று பாடப்படும் சிங்கள மொழி தேசிய கீதத்தை ஆனந்த சமரகோன் உருவாக்கினார். அதைப் பின்பற்றி தமிழ் மொழியில் அதே அர்த்தங்களுடன் பண்டிதர் மு.நல்லதம்பி உருவாக்கினார். இது 1950 இல் நடைபெற்றது. இந்த இரண்டு தேசிய கீதங்களும் ஒரே தாள மெட்டிலும் அமைந்துள்ளன. இன்று பிரிந்து நிற்கும் தமிழ், சிங்களம் பேசும் சமூகங்களை ஐக்கியப்படுத்தும் அற்புதமான கருவி இதுவாகும். இதைப் புரிந்துகொண்டு செயற்படுவது நாட்டை நேசிப்பவர்களின் கடமையாகும்.

கனடாவில்"ஓ, கனடா' என ஆரம்பிக்கும் இரண்டு தேசிய கீதங்கள் ஆங்கில, பிரெஞ்சு மொழிகளில் உள்ளன. பிரெஞ்சு மொழியில் முதலில் எழுதப்பட்ட இந்த கீதம் பின்னர் ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கப்பட்டது. இது ஒரே நாட்டில், ஒரே அர்த்தத்தில் இரு மொழிகளில் தேசிய கீதங்கள் இருப்பதற்கு உதாரணம்.

தென்னாபிரிக்காவில் ஒரே தேசிய கீதம் உள்ளது. இதில் ஆங்கிலம், ஆபிரிக்கன் உட்பட மொத்தம் ஐந்து மொழிகளின் வார்த்தைகள் உள்ளன.
இதன் மூலம் அந்த நாட்டின் ஐக்கியம் பாதுகாக்கப்படுகிறது.இலங்கையில் ஒரே அர்த்தத்தில் இரு மொழிகளில் தேசிய கீதங்கள் உள்ளன. இதை வேண்டாம் எனச் சொல்லி பிரச்சினையை இவர்கள் முதலில் கிளப்பினார்கள். இவர்கள் கிளப்பிய பிரச்சினைக்குத் தீர்வாக இன்று ஒரே கீதத்தில் இரண்டு மொழி வார்த்தைகள் என இவர்களே சொல்கிறார்கள். தமிழ் பேசும் மக்களுக்கு இன்று தேசிய கீதத்தை விட பெரும் பிரச்சினைகள் உள்ளன. தமிழருக்கு இலங்கை தேசிய உணர்வே மறந்துவிட்டது. முஸ்லிம்களும் இன்று இந்தக் கொடுமையை அனுபவிக்கத் தொடங்கியுள்ளார்கள்.

இருந்தாலும், தேசிய கீதம் தமிழ் மொழியில் பாடப்படுவது இந்நாட்டில் நீண்டகாலமாக நடைபெற்று வருகிறது. ஸ்ரீ லங்கா தாயே எனத் தொடங்கும் இந்தப் பாடல் தமிழீழத்தைப் பற்றிப் பாடவில்லை. அது இலங்கை என்ற முழு இலங்கையைப் பற்றிதான் பாடுகிறது. இந்த தமிழ் மொழியிலான தேசிய கீதத்தை இருப்பது போலவே பாடவிட்டாலே நமக்கு போதும்.

ஜெனீவா காய்ச்சல் நல்லிணக்க ஆணைக்குழு அறிக்கையைக் காட்டித்தான் அரசு ஐ.நா.வில் பிணை வாங்கி வந்தது. நமது ஐ.நா. தூதுக்குழு கற்றுக்கொண்ட ஆணைக்குழு சிபாரிசுகளை அமுல் செய்கிறோம் என்றும் உண்மையில் 50% அமுல் செய்து விட்டோம் என்றும் ஐ.நா.வில் சொன்னார்கள். அப்படியானால் சரி, மிகுதி 50% தையும் அமுல் செய்துவிட்டு அடுத்த மார்ச் மாதம் வாருங்கள் என சொல்லி உலகம் நம்மவர்களளை வழியனுப்பி வைத்தது. இதோ இன்று அன்று சொன்ன அந்த "அடுத்த மார்ச்' வந்துவிட்டது.

இவர்கள் இந்த ஒரு வருடத்தில் நல்லிணக்க ஆணைக்குழு சிபாரிசுகள் எதையும் அமுல் செய்யவில்லை. அது நமக்கு தெரியும். எனவே, இந்த முறை அங்கு சென்று எந்தப் பொய்யை, எப்படிச் சொல்வது என இந்த அரசாங்கம் முழித்துக்கொண்டு இருக்கிறது. இதுவும் இன்று நமக்குத் தெரியும். இந்த ஆணைக்குழு அறிக்கை ஐ.நா. ஆணைக்குழு அறிக்கை இல்லை. இது இந்த நாட்டு அரசாங்கம் தயாரித்து உலகத்துக்கு அளித்த அறிக்கையாகும். இதுவே இன்று அரசாங்கத்தில் உள்ள சிலருக்கு மறந்துவிட்டது.

கடந்த முறை இன்றைய பிரதம நீதியரசர் மொஹான் பீரிஸ் அரச தூதுக்குழுவில் ஜெனீவா போனார். இந்த முறை அவருக்குப் பதில் சரத் சில்வா போக இருப்பதாக கதை அடிபடுகிறது. சரத் சில்வா அங்கும் இங்கும் என்று எல்லா இடத்திலும் இருந்தவர். ஆகவே அவர் ஜெனீவாவும் போகட்டும். யார் போனாலும் உண்மை பேச வேண்டும். இல்லாவிட்டால் சிக்கல் காத்திருக்கிறது. ஏனென்றால், உலகத்துக்கு இன்று உண்மை தெரியும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக