சனி, 9 மார்ச், 2013

யுத்தக் குற்றத்திற்கான விசாரணையை முன்னிறுத்தி இலங்கைத் தமிழர்கள் ஒருபோதும் தற்கொலை செய்ய மாட்டார்கள் - சவேந்திர சில்வா!

News Serviceயுத்தக் குற்றச் செயல்; விசாரணை நடாத்துமாறு கொரி இலங்கைத் தமிழர்கள் உள்நாட்டிலோ வெளிநாட்டிலோ தற்கொலை செய்து கொள்ள மாட்டார்கள் என ஐக்கிய நாடுகள் அமைப்பிற்கான இலங்கை பிரதி வதிவிடப் பிரதிநிதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். 2009ம் ஆண்டு யுத்தம் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டது முதல் இதுவரையில் யுத்தக் குற்றச் செயல் விசாரணையை வலியுறுத்தி இலங்கைத் தமிழர் எவரும் தற்கொலை செய்து கொள்ளவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். புலிகளின் பிடியிலிருந்த போது பல்வேறு நெருக்கடிகளை அனுபவித்து வந்த இலங்கைத் தமிழர்கள் தற்போது சமாதானத்தை அனுபவித்து வருவதாகத் தெரிவித்துள்ளார். அண்மையில் சென்னையில் மீனவ சமூகத்தைச் சேர்ந்த தமிழகத் தமிழர் ஒருவர் இலங்கையில் யுத்தக் குற்றச் செயல் விசாரணை நடாத்தப்பட வேண்டுமெனக் கோரி தற்கொலை செய்து கொண்டிருந்தார்.
இது தொடர்பில் கருத்து வெளியிட்ட போது சவேந்திர சில்வா இந்தக் கருத்தை வெளியிட்டுள்ளார். தற்கொலை செய்து கொண்டவரின் கடிதம் பாதி தட்டச்சு செய்யப்பட்டுள்ளதுடன் பாதி கையால் எழுதப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பில் விசாரணை நடத்தப்பட வேண்டுமென அவர் தெரிவித்துள்ளார். ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை அமர்வுகள் நடைபெறும் காலப் பகுதியில் தமிழீழ விடுதலைப் புலிகள் மிகவும் கடுமையான ஊடகப் பிரச்சாரங்களை முடுக்கி விடுவதாகக் குறிப்பிட்டுள்ளார். இவ்வாறான ஊடகப் பிரச்சாரங்களினால் தமிழ் மக்களை திசை திருப்ப முடியாது என அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக