வடமாகாணசபை தேர்தலில் தமிழ் மக்கள் நல்லதொரு முடிவினை எடுப்பார்களேயானால் பலாலியில் மீள் குடியேற்றம் உள்ளிட்ட பல விடயங்களை் சுலபமாக தீர்க்கப்பட்டுவிடும் என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம் இராசாவின் தோட்டம் வீதியிலமைந்துள்ள யாழ்.ஊடக அமையத்தில் நேற்றைய தினம் இடம்பெற்ற ஊடகவியலாளர்களுடனான சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். யாழ். ஊடக அமையம் நிறுவப்பட்டமை பாராட்டத்தக்கது என்றும் அதன் நோக்கம் சரியானதாகவும், நேர்மையானதாகவும் இருக்க வேண்டுமென்பதுடன் ஊடகங்களும், ஊடகவியலாளர்களும் பக்கசார்பின்றி உண்மைச் செய்திகளை வெளியிடுவதே முக்கியமானது என்றும் அவர் சுட்டிக்காட்டியிருந்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், ஊடகங்கள் பலப்படுத்தப்பட வேண்டுமென்பதுடன் அவை உண்மை மற்றும் நேர்மையான வழியில் பயணிக்கும் பட்சத்தில் அவற்றுக்கு முழுமையான பங்களிப்பை வழங்கத் தயாராகவுள்ளேன். அத்துடன் அமையத்தின் நோக்கம் சரியானதாகவும், நேர்மையானதாகவும் இருக்க வேண்டுமென்பதுடன் இதற்கென ஒழுக்கநெறிக் கோவை அமைத்து செயற்பட வேண்டுமெனவும் அவர் கேட்டுக்கொண்டார். அத்துடன் அவ்வப்போது ஏற்படும் பிரச்சினைகளுக்கு தீர்வு காணவேண்டிய பொறுப்பு ஊடகங்களுக்கு உண்டென்றும், அதனை தூண்டவேண்டாமென்றும் கடந்த காலங்களில் ஊடகங்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் எதிர்நோக்கிய இடர்பாடுகள், பிரச்சினைகள் மற்றும் தீர்வுகள் குறித்தும் தெளிவுபடுத்தினார்.
இதனிடையே ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி (ஈ.பி.டி.பி) தொடர்பில் ஊடகங்களில் வெளிவரும் அவதூறான செய்திகள் தொடர்பில் தாம் துறைசார்ந்தோரிடம் பகிரங்கமாக விவாதிக்க தயாராகயிருப்பதாகவும், எமது கொள்கைகளை நாம் வெளிப்படையாகவே வெளியிட்டு வருகின்றோம் என்றும் ஈ.பி.டி.பி தப்புச் செய்தால் உண்மையை நிரூபித்து செய்திகளை வெளியிடுங்கள் என்றும் கட்சி தவறு செய்யும் பட்சத்தில் அதற்கு பொறுப்பெடுத்து நிச்சயம் நடவடிக்கை எடுக்கப்படுமென்றும் தெரிவித்தார். இதன்போது ஈ.பி.டி.பியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் தவராசா உடனிருந்தார்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக